ஆர்.கே.நகர் தேர்தல்: இரட்டை இலைக்காக தினகரன் களமிறக்கிய 'ஸ்லீப்பர் செல்கள்' இவர்கள்தான்!
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை எப்படியும் பெற்றுவிட வேண்டும் என்பதில் படுதீவிரமாக இருக்கிறது தினகரன் தரப்பு.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை எப்படியும் பெற்றுவிட வேண்டும் என்பதற்காக அதிமுக துணைப் பொதுச்செயலர் டி.டி.வி. தினகரன் படுதீவிரமான முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 12-ந் தேதி நடைபெறுகிறது. இத்தொகுதியில் அதிமுக வாக்குகளை நம்பி தீபா களம் காண்கிறார்.
அதேபோல் ஓபிஎஸ் அதிமுகவும் சசிகலா அதிமுகவும் இத்தொகுதியில் போட்டியிட உள்ளன. அதிமுக வாக்குகள் சிதறி கிடக்கும் நிலையில் இத்தொகுதியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் திமுக இருக்கிறது.

களத்தில் திருமா?
அதிமுக, திமுகவுக்கு கடும் போட்டியைத் தரும் வகையில் மக்கள் நலக் கூட்டணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை பொதுவேட்பாளராக நிறுத்தவும் முயற்சித்து வருகிறது. இதனால் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் களமானது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரட்டை இலை..
இதனிடையே அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கப் போகிறது என்கிற க்ளைமாக்ஸ் காட்சிக்காக ஓபிஎஸ், சசிகலா அணிகள் காத்திருக்கின்றன. தேர்தல் ஆணையம் இது தொடர்பாக அறிவிக்கும் முடிவில்தான் அடுத்தடுத்த திருப்பங்கள் நடந்தேற இருக்கின்றன.

ஸ்லீப்பர் செல்கள்
இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற படுதீவிரமான முயற்சிகளில் இறங்கியுள்ளாராம் டிடிவி தினகரன். இதற்காக ஸ்லீப்பர் செல்களாக பல லாபியிஸ்டுகளை களம் இறக்கிவிட்டுள்ளார் தினகரன்.

இவர்கள்தான்...
தமிழக அரசின் ஓய்வு பெற்ற அதிகாரிகள் டீம், காஞ்சி சங்கராச்சாரியார் மற்றும் சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர்தான் தினகரனின் தற்போதைய ஸ்லீப்பர் செல்கள். இவர்கள் மூலமே தேர்தல் ஆணையத்திடம் இருந்து சாதகமான முடிவைப் பெற்று விட வேண்டும் என முனைப்பில் இருக்கிறாராம் தினகரன்.
சாதிக்குமா ஸ்லீப்பர் செல்கள்!












Click it and Unblock the Notifications