உமா மகேஸ்வரிக்கு டிசிஎஸ் நிறுவனம் வாகனம் தராதது ஏன்?
சென்னை: வழக்கமாக அலுவலகத்திற்கு வந்து செல்லும் பாதைதான்... அந்த தைரியத்தில்தான் நள்ளிரவு நேரம் என்றாலும் அச்சமின்றி தனியாக சென்றுள்ளார் டிசிஎஸ் என்ஜீனியர் உமா.
அதுவே உமாவின் உயிருக்கு வினையாகிப் போனது. இரவுநேர பணிபுரியும் பெண்களுக்கு என அலுவலகத்தில் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவ தினத்தன்று அலுவலக வாகனத்தில் செல்லாமல் தனியாக பிரதான சாலை வரை நடந்து சென்று வேறு வாகனத்தில் செல்ல முயன்றதுதான் உமாவின் மரணத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
வாகனம் மறுப்பு
பிப்ரவரி 13ம் தேதி நள்ளிரவுதான் நமக்கு கடைசி இரவு என்று டிசிஎஸ் பெண் ஊழியர் உமா மகேஸ்வரிக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. அதனால்தான் அவர் பணி முடிந்து தனது வீட்டிற்குச் செல்ல வாகனம் வேண்டும் என்று கேட்டும் அவருக்கு மறுக்கப்பட்டிருக்கிறது.
காரணம் என்ன?
இதற்கான காரணத்தைக் கூறும் டி.சி.எஸ் நிர்வாகம், பிப்ரவரி 13ம் தேதி உமா மகேஸ்வரி வாகனம் வேண்டும் என்று விண்ணப்பம் செய்தது உண்மைதான், ஆனால் அவர் தவறானதை தேர்வு செய்து விண்ணப்பம் செய்துவிட்டார் அதனால்தான் வாகனம் ஏற்பாடு செய்யும் நிர்வாகம் அவருக்கு மறுத்துவிட்டது என்கின்றனர்.
200 மீட்டர் தொலைவில்
உமா மகேஸ்வரி காணாமல் போய் 9 நாட்களுக்குப் பின்னர் அவர் வேலை செய்த டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் அழுகிய நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதற்கு காரணம் வாகனமின்றி புதர்காடுகள் அடங்கி வழியில் உமா மகேஸ்வரி தனியாகப் போனதுதான் காரணம்.
கனடா நிறுவன ஒப்பந்தம்
உமா மகேஸ்வரி பணி புரிவது கனடா வாடிக்கையாளர்களுக்கு. அவர்களுக்கு என்று 1008419 என்ற காஸ்ட் எண் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அன்றைய தினம் உமா தேர்வு செய்தது 1008417 என்ற காஸ்ட் எண். இதுதான் உமா செய்த இமாலயத் தவறு என்கின்றனர் வாகன ஏற்பாட்டாளர்கள். ஊழியர்களின் வாகனக் கோரிக்கையை இப்படி ஏதாவது காரணம் சொல்லி நிராகரித்து விடுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
நிர்வகம் மறுப்பு
ஆனால் இந்த குற்றச்சாட்டிற்கு டிசிஎஸ் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. உமா மகேஸ்வரி கடைசியாக வாகனக் கோரிக்கை விடுத்தது திங்களன்று அதாவது பிப்ரவரி 10ம் தேதி. ஆனால் அவர் காணாமல் போன பிப்ரவரி 13ம் தேதி வாகனம் கேட்கவில்லை தனியாகவே நடந்து போயிருக்கிறார் என்று கூறுகின்றனர். ஊழியர்களின் பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியம் என்றும் கூறுகின்றனர்.
வாகனம் அவசியம்
தினசரி 3 மணி நேரத்திற்கு முன்பாகவே வாகனம் வேண்டும் என்று கோரிக்கை விடுப்பவர்களுக்கு நிர்வாகம் ஏற்பாடு செய்து விடும். சிறுசேரியில் இருந்து கதீட்ரல் சாலை வரை 25 கிலோமீட்டர் தொலைவுக்கு வாகனம் ஊழியர்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது என்றும் டிசிஎஸ் நிறுவனத்தினர் கூறுகின்றனர்.
மரணித்த உமா
எது எப்படியோ, நள்ளிரவில் தைரியமாக தனியாக வந்த உமாவின் வாழ்க்கையே முடிந்து விட்டது. உமா மகேஸ்வரி தினசரி நடந்து செல்லும் பாதையில் கடந்த ஒருவாரத்திற்கு முன்பே வடமாநில தொழிலாளர்களினால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதை அலுவலகத்திலோ, காவல் நிலையத்திலோ புகார் கொடுத்திருக்கலாம். ஆனாலும் என்ன நடக்கப் போகிறது என்ற தைரியத்தில் பேசாமல் இருந்துவிட்டார். அந்த மவுனம்தான் உமாவை கடைசிவரை பேசவிடாமல் செய்துவிட்டது.
பாதுகாப்பு அவசியம்
நள்ளிரவில் பெண் ஊழியர்கள் அதிகம் பணிபுரியும் இடங்களில் போலீசார் ரோந்து செல்லாததும் இது போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதற்கு முக்கிய காரணமாகும். எனவேதான் உமாவின் மரணத்திற்குப் பின்னர் விழித்துக் கொண்ட போலீஸ் பணியாளர்களை கண்டிப்பாக வாகனத்தில் கொண்டு போய் விடுவது அவசியம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.