தூத்துக்குடி அனல்மின் நிலைய முதல் யூனிட்டிலும் திடீர் பழுதால் மின்உற்பத்தி நிறுத்தம்
தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் 2-வது யூனிட் பாதிப்படைந்திருந்த நிலையில் முதல் யூனிட்டிலும் ஏற்பட்ட திடீர் பழுதால் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மின்வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது..
தமிழகத்தில தற்போது கோடை வெயில் வறுத்தெடுத்து வருகிறது. இதனால் மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஆனால் மின் உற்பத்தியோ கேள்விக் குறியாக இருந்து வருகிறது.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகா வாட்மின் உற்பத்தி திறனுள்ள 5 யூனிட்டுகள் உள்ளன. இவற்றின் மூலம் 1010 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும்.ஆனால் நிர்ணயிக்கப்பட்ட ஆயுட்காலத்தையும் தாண்டி இவை இயக்கப்படுவதால் அடிக்கடி பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி பாதி்க்கப்படுகிறது.
இந்நிலையில் முதல் யூனிட்டில் மின் சாதனம் பழுது காரணமாக திடீரென மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இவற்றை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன வருகிறது. ஏற்கனவே இரண்டாவது யூனிட்டிலும் பழுது காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது கோடை வெயில் அதிகரித்து வருவதால் மின் நுகர்வு அதிகரித்து வரும் சூழ்நிலையில் 2 யூனிட்டுகள் பழுதால் மின் தடை நேரம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு யூனிட்டு்களையும் பழுது பார்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அனல் மின் நிலைய பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.