காதலிக்க மறுத்த மாணவியை பீர் பாட்டிலால் குத்திய வாலிபர் - தற்கொலைக்கு முயற்சி
திருப்பூர்: திருப்பூரில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவி பீர் பாட்டிலால் குத்தப்பட்டார். அவரை பாட்டிலால் குத்தி கொல்ல முயன்ற வாலிபரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் புது ஆத்துப்பாளையம் ரங்கசாமி மகன் குரு. இவர் புதுக்காடு பகுதியில் உள்ள பனியன் கம்பனியில் வேலை பார்த்து வருகிறார். திருப்பூர் புதூர் மெயின் ரோடு காமாட்சி நகர் பகுதியை சேர்ந்த பிளஸ் 1 படித்து வரும் 17 வயது மாணவியை குரு ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டு இருந்த மாணவியை அவரது வீட்டின் அருகில் குரு வழி மறித்துள்ளார். குடிபோதையில் இருந்த அவர் தன்னை காதலிக்கும் படியும், திருமணம் செய்துகொள்ளுமாறும் மாணவியை வற்புறுத்தியதாக தெரிகிறது. அதனை ஏற்க மாணவி மறுத்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது ஆத்திரம் அடைந்த குரு, தன் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்து மாணவியை குத்தினார். இதில் மாணவியின் இடது கண்ணில் படுகாயம் ஏற்பட்டது. பின்னர் குரு அதே பாட்டிலால் தன்னுடைய கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சம்பவம் அறிந்து அரசு மருத்துவமனைக்கு வந்த திருப்பூர் தெற்கு போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தினர். காயமடைந்த மாணவியிடம் திருப்பூர் துணை போலீஸ் கமிஷனர் மணி நேரில் வந்து சம்பவம் குறித்து விசாரித்தார். காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை பாட்டிலால் குத்திய வாலிபர் தானும் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications