நெல்லை அருகே கோவில் பூசாரி தலையில் கல்லைப்போட்டு கொலை: போலீஸ் குவிப்பு
நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் கோவில் பூசாரியை மர்ம நபர்கள் தலையில் கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம், நெட்டப்புளித்தெரு, காந்தி நகரில் அய்யாவழி கோவில் உள்ளது. அதே ஊரைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் என்பவர் மகன் அற்புத சாமி (85) பூசாரியாக இருந்தார். இவர் இரவு நேரத்தில் கோவில் வளாகத்தில் தங்குவது வழக்கம். நேற்றிரவு இவர் கோவிலில் தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் அவரது தலையில் கல்லால் அடித்துக் கொலை செய்துள்ளனர். இன்று காலையில் அவ்வழியாக சென்ற சிலர் இதை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த அம்பாசமுத்திரம் போலீஸ் டிஎஸ்பி மணிமாறன், விக்கிரமசிங்கபுரம் இன்ஸ்பெக்டர் மாடசாமி ஆகியோர் சம்பவ இடத்தில் பரிசீலனை நடத்தினர். அற்புதசாமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ள விக்ரமசிங்கபுரம் போலீசார், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே மத மோதல்களை தடுக்க விக்ரமசிங்கபுரம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.