3000 அடி உயரத்திலிருந்து பக்தர் விழுந்து பலி எதிரொலி... தலைமலை கோயிலுக்கு தற்காலிக வேலி
திருச்சி அருகே தலைமலை கோயிலில் 3000 அடி உயரத்திலிருந்து பக்தர் ஒருவர் விழுந்ததை அடுத்து அந்த கோயிலுக்கு தற்காலிக வேலி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருச்சி: தலைமலையில் உள்ள நல்லேந்திர பெருமாள் கோயிலில் 3000 அடி உயரத்திலிருந்து பக்தர் ஒருவர் விழுந்ததை அடுத்து அந்த கோயிலுக்கு தற்காலிக வேலி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அகண்ட காவிரியின் வடகரையில் நீர்வளம், நிலவளம் பொருந்திய தலைமலையில் உள்ள நல்லேந்திர பெருமாள் கோயில் மிக பழமையும், தொன்மையும் வாய்ந்த சிறப்பு பெற்ற வைணவ கோயிலாகும். கடந்த புரட்டாசி கடைசி சனிக்கிழமை அன்று ஏராளமான பக்தர்கள் காலை முதலே கிரிவலம் வந்திருந்தனர்.
Recommended Video
அப்போது கிரிவலம் வந்த இளைஞர் ஒருவர் 3000 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்தார். போலீஸ் விசாரணையில் அந்த இளைஞரின் பெயர் ஆறுமுகம் என்றும் திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகியும் குழந்தையில்லாததால் குழந்தை வரம் வேண்டி கிரிவலம் வந்ததும் தெரியவந்தது.
அந்த இளைஞர் 600 அடி பள்ளத்தில் இறந்து கிடந்தார். இதையடுத்து ஆபத்தான அந்த கோயில் சுவற்றில் கிரிவலம் வர தடை விதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதன்படி சஞ்சீவராய பெருமாள் கோயில் சுவற்றில் கிரிவலம் செல்வது ஆபத்தானது என்றும் இது ஆபத்தான பகுதி என்றும் எருமைப்பட்டி போலீஸார் சார்பில் எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த கோயிலுக்கு முதற்கட்டமாக இரும்பு கம்பி வேலி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் பின்னர் நிரந்தரமாக வேலி அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.