பழைய குற்றால அருவி! சுற்றுலா பயணிகளுக்கு அதிரடி கட்டுப்பாடு.. இந்த டைமில் வந்தால் அனுமதி கிடையாது
தென்காசி: தென்காசி குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில், பழைய குற்றால அருவியில் காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை மட்டுமே குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்ட நிலையில் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 வாரங்களாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளில் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது.

இதேபோல் நெல்லை தென்காசியில் உள்ள அருவிகளிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மணிமுத்தாறு, அகஸ்தியர் அருவி, குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு குற்றாலம் மெயின் அருவியில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் அங்கு குளித்து கொண்டிருந்த 15 வயது சிறுவன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தான்.
இதையடுத்து பழைய குற்றால அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மேலும் வனத்துறை கட்டுப்பாட்டில் பழைய குற்றால் அருவி இல்லாததால் தான் இந்த சிறுவன் உயிரிழந்ததாக பேசப்பட்டது. இதையடுத்து குற்றாலத்தில் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்ததால் சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மாலை முதல் குற்றால அருவிகளில் குளிக்க தடை நீக்கப்பட்டுள்ளதாகவும், குற்றாலம் பழைய அருவியில் குளிப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை மட்டுமே குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கூறினார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் நேற்று குற்றாலத்தில் உள்ள அருவிகளில் ஆய்வு நடத்தினர். இதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கூறுகையில், "குற்றால மெயின் அருவியில் தற்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே இந்த பணிகள் முடிவடையும் வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி கிடையாது.
பழைய குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி தடுப்புகள் அமைக்கும் பணி நடக்கின்றன. எனவே அங்கு மாலை 5.30 மணிக்கு மேல் அனுமதி கிடையாது. பொதுவாக, அருவிகளில் வெள்ளம் அதிகமாக வருவதை முன்னதாகவே கண்காணித்து சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்வதற்கு அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் தலைமையில் மாணவர்கள் ஆய்வு செய்து வருகின்றார்கள்.
எனவே, விரைவில் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகிய பகுதிகளில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். பழைய குற்றாலம் அருவியானது, வனத்துறை இடத்தில் இருப்பதனால், இதனை வனத்துறையிடம் ஒப்படைக்க பொதுப்பணித்துறைக்கு வனத்துறையினர் கடிதம் எழுதியுள்ளனர்" என்றார்.












Click it and Unblock the Notifications