தென்காசி ரயில்வே மேம்பாலம் 8ந் தேதி திறப்பு- கடை அடைப்பு போராட்டம் ரத்து!
தென்காசி: தென்காசியில் கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம் நாளை மறுநாள் திறக்கப்படும் என்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனால் வர்த்தக சங்கம் சார்பில் இன்று அறிவிக்கப்பட்டிருந்த கடை அடைப்பு போராட்டம் ரத்து செய்யப்பட்டது.
தென்காசி நகரில் ரயில் வந்து செல்லும் போது ஒவ்வொரு முறையும் கேட் அடைக்கப்படும். அப்போது இரு புறமும் கார்கள் அணிவகுத்து நிற்கும். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனை அடுத்து 36 கோடி ரூபாய் செலவில் சுமார் 850 மீட்டர் நீளத்திற்கு புதிய மேம்பாலம் அமைக்கப்பட்டது. கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் நடந்த பணிகள் முடிவடைந்த பின்னரும் நெடுஞ்சாலை துறையினர் பாலத்தை திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்யவில்லை.
இதனால் பொதுமக்களும், அரசியல் கட்சியினரும், வர்த்தக நிறுவனங்களும் பாலத்தை திறக்க போராடி வந்தனர். இதில் உச்சகட்டமாக கம்யூனிஸ்ட் கட்சியினர் பாலத்தை திறந்து வைக்கவே முயன்றனர். கவுன்சிலர்கள் உள்பட பல்வேறு அமைப்பினரும் போராடி வந்த நிலையில் தென்காசி வர்த்தக சங்கம் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்து.
இதில் பல்வேறு தொண்டு நிறுவனங்களும் கலந்து கொள்வதாக அறிவி்த்திருந்தன. பொதுமக்களும், பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சியினரும் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்ததால் நெடுஞ்சாலை துறை திடீரென நாளை மறுநாள் பாலத்தை திறக்க போவதாக அறிவி்த்துள்ளது. இதுகுறித்து கோட்ட பொறியாளரிடமிருந்து உறுதியான தகவல் கிடைத்ததால் வர்த்தக சங்கம் இன்று அறிவித்திருந்த கடை அடைப்பு போராட்டத்தை ரத்து செய்துள்ளது.












Click it and Unblock the Notifications