தற்கொலை செய்து கொள்வேன்...10 ஆம் வகுப்பு மாணவனை பிரிய மறுக்கும் தென்காசி ஆசிரியை !
தென்காசி: தென்காசி அருகே கடந்தாண்டு மாயமானதாக தேடப்பட்டு வந்த ஆசிரியையும், மாணவரையும் திருப்பூரில் வைத்து போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். இதனிடையே எங்களை பிரித்தால் தற்கொலை செய்து கொள்வேன் என ஆசிரியை கோதை தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் தென்காசி அருகே கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் சந்திரகுமார். மத்திய போலீஸ் படையில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுடைய 15 வயது மகன், தென்காசி ஈனாவிலக்கு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தான்.
கடந்தாண்டு மார்ச் மாதம் 31ம் தேதி அன்று பள்ளிக்குச் சென்ற அம்மாணவன் மாலையில் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த பெற்றோரின் புகாரின் பேரில் கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது, மாயமான மாணவனும் அவனுடைய வகுப்பு ஆசிரியையான செங்கோட்டை காலாங்கரை பகுதியைச் சேர்ந்த கோதைலட்சுமியும் (29) காதலித்து வந்ததும், அவர்கள் இருவரும் ஊரை விட்டு ஓடியதும் தெரியவந்தது. இதையடுத்து மாயமான மாணவனையும், ஆசிரியையும் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில், ஆசிரியை கோதையும், அம்மாணவரும் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணிக்கு சென்று வருவதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக திருப்பூருக்கு விரைந்து சென்ற கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று அதிகாலை அவர்களைக் கைது செய்துள்ளனர்.
பின்னர் அவர்கள் இருவரையும் நேற்று மதியம் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அங்கிருந்து அவர்களை கடையநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது ஆசிரியை கோதைலட்சுமி போலீசாரிடம் கூறுகையில்,‘நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் உண்மையாக காதலித்தோம். சேர்ந்து வாழ ஆசைப்பட்டோம். ஆனால் எங்கள் காதலை யாரும் ஏற்க மாட்டார்கள் என்பதால் புதுச்சேரி சென்று அங்கு நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.
அதுவரை எங்களுக்குள் உடல் ரீதியான தொடர்பு இருந்ததில்லை. திருணமத்திற்கு பின்பு தான் கணவன்-மனைவியாக வாழ்ந்தோம். இப்போது நான் 4 மாத கர்ப்பிணியாக உள்ளேன். எங்களை நிம்மதியாக சேர்ந்து வாழ விடுங்கள். சட்டத்தின் மூலம் எங்களை பிரித்தாலும் மீண்டும் நாங்கள் சேர்ந்து வாழ்வோம். பணத்தின் மூலம் எங்களை பிரிக்க நினைத்தால் நான் தற்கொலை செய்துகொள்வேன்' என்று உருக்கமாக கூறி உள்ளார்.
இதன் பின்னர் கோதைலட்சுமி மற்றும் மாணவன் இருவருக்கும் தென்காசி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்களை தொன்காசி நீதிமன்ற நீதிபதி ஜெகதீஸ்வரி முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து கோதைலட்சுமி நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார். மாணவர் நெல்லை கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளார்.