ஈழப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு கோரி... நாளை சென்னையில் கருணாநிதி தலைமையில் டெசோ ஆர்ப்பாட்டம்
சென்னை: டெசோ அமைப்பின் சார்பில் நாளை காலை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்குகிறார்.
கடந்த மாதம் 26ம் தேதி தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் தமிழ் ஈழம் ஆதரவாளர்கள் அமைப்பின் (டெசோ) கூட்டம் நடைபெற்றது. அதில், ஈழத் தமிழகர்கள் விரும்பும் அரசியல் தீர்வை உடனடியாக மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை திரும்ப தரக்கோரியும், ஐ.நா. விசாரணைக்குழு விசாரணையை இந்தியாவில் நடைபெற அனுமதிக்க வேண்டும். இலங்கை அதிபர் ராஜபக்சே மற்றும் அந்த நாட்டு பிரதிநிதிகளை ஐ.நா. பொது உறுப்பினர் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்க கூடாது என்றும் அந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், இந்த தீர்மானங்களை வலியுறுத்தி நாளை காலை டெசோ அமைப்பின் சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசியர் சுபவீர பாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்கள்.
இது தொடர்பாக தென் சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. வடசென்னை மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கழக தோழர்கள் அனைவரும் கொடியுடன் அணி திரண்டு பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
இது பற்றி தி.மு.க. தொழிலாளர்கள் அணி செயலாளர் சிங்கார ரத்தின சபாபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் தி.மு.க. சார்ந்துள்ள சங்கங்களின் ஓட்டுனர்கள், தொழிலாளர்கள் அனைவரும் பெருந்திரளாக டெசோ ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.