பிரசாரத்திற்கு வந்த இடத்தில் தா.பாண்டியனுக்கு திடீர் உடல் நலக்குறைவு
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் பிரசாரத்திற்காக வந்த இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வருகிற 13 ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஸ்ரீரங்கத்தில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் வேட்பாளர் அண்ணாதுரைக்கு ஆதரவாக இன்று திருவானைக்காவலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுவதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் நேற்று இரவு திருச்சிக்கு வந்தார்.

ஏற்கனவே காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவருக்கு நேற்று இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து திருச்சி புத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருமாவளவனுக்கும் உடல்நலக்குறைவு
இதேபோல் மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் கடந்த 3 நாட்களாக திருச்சி கண்டோன்மெண்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கும் டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications