மோடியுடன் கூட்டணி என்று கூற கூச்சப்படுகிறார்கள்: தா. பாண்டியன் தாக்கு
சிவகங்கை: தலையால் வந்த சீதேவியை ஜெயலலிதா காலால் எட்டி உதைத்துவிட்டார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா. பாண்டியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கிருஷ்ணன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சியின் மாநில செயலாளர் தா. பாண்டியன் திருப்பத்தூரில் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
மோடி
முதல் கட்ட தேர்தல் பிரச்சாரம் முடிந்தும் பாஜக இன்னும் தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை. குஜராத் முதல்வர் மோடி இந்தியாவிற்கு மட்டும் அல்லாது உலகிற்கே வழிகாட்டி என்கிறார்கள். ஆனால் அவர் ஆளும் குஜாராத்தில் 11 லட்சம் வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லை. மின்சாரம் உபரியாக இருந்தும் ஏன் இப்படி?
பிரதமர்
நாற்பது தொகுதிகளும் நமக்கே. நாம் தான் பிரதமர் என்று கூறி வந்தார்கள். தற்போது அதை விட்டுவிட்டார்கள். மத்திய அரசில் அங்கம் வகிப்போம் என்கிறார்கள். ஆனால் மோடியுடன் தான் கூட்டணி என்று கூற கூச்சப்படுகிறார்கள்.
ஜெயலலிதா
தலையால் வந்த சீதேவியை ஜெயலலிதா காலால் எட்டி உதைத்துவிட்டார். 9 கூட்டணி கட்சிகளின் வாக்குகளால் தான் முதல்வர் ஆனோம் என்பதை அவர் மறந்துவிட்டார்.
மாநாடு
நூற்றுக்கணக்கான ஏக்கரில் நிலம் வாங்கி மாநாடு நடத்துவார்கள். அதை எல்லாம் தேர்தல் கணக்கில் சேர்க்க மாட்டார்கள். ஆனால் ஆடு வியாபாரி ரூ.1 லட்சம் எடுத்துச் சென்றால் அதை பறித்துக் கொண்டு ஆவணங்கள் கேட்பார்கள் என்றார்.