இ.கம்யூ. புதிய மாநிலச் செயலர் யார்? பதவியை விட மறுக்கும் தா.பா! கலகக் குரல் எழுப்பும் எதிர்கோஷ்டி!!
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழுவின் செயலாளராக தா. பாண்டியன் தொடர்ந்தும் நீடிக்க கட்சியில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு மார்ச் மாதம் இறுதியில் புதுச்சேரியில் நடைபெற உள்ளது. முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழுவின் மாநாடு கோயம்புத்தூரில் பிப்ரவரி 25 முதல் 28-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
கடந்த 2005-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராக பொறுப்பேற்றார் தா.பாண்டியன். அக்கட்சியைப் பொறுத்தவரையில், மாநிலச் செயலாளர் என்பவர் 2 முறை மட்டுமே அதாவது 6 ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருக்க முடியும். மேலும் ஒருமுறை பதவியில் நீடிக்க வேண்டுமென்றால் மாநிலக் குழுவில் 3-ல் 2 பங்கு நிர்வாகிகள் ஆதரிக்க வேண்டும்.

3வது முறையாக தா.பா
இதனடிப்படையில் தா. பாண்டியனுக்கு மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன், மூத்த தலைவர் நல்லகண்ணு என பலரும் ஆதரவு தெரிவித்தனர். இதனால் அவர் 3வது முறையாகத் தேர்வானார். பின்னர் லோக்சபா தேர்தல் வந்ததால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு ஒரு ஆண்டு ஒத்தி வைக்கப்பட்டது

மீண்டும் தா.பா?
இதனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராக 10 ஆண்டுகளாக இருந்து வருகிறார் தா. பாண்டியன். தற்போது தா. பாண்டியன் மீது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. இதனால் அவரை மீண்டும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் மாநிலச் செயலாளராக்கிவிடக் கூடாது என்று ஒரு பிரிவினர் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றனர்.

சாத்தியம் குறைவு
அக்கட்சியின் புதிய மாநிலக்குழு உறுப்பினர்களான 131 பேரில் 75% தா. பாண்டியனை ஆதரித்து சிறப்பு தீர்மானம் கொண்டுவந்து அது வெற்றிபெற வேண்டும். அப்போதுதான் தா.பாண்டியன் மீண்டும் தமிழ் மாநிலச் செயலாளராக முடியும்.

கடும் அதிருப்தி
ஆனால் சென்னையில் கட்சி தலைமையகத்தில் கட்டிடம் கட்டியது, திருச்சியில் தொழிற்சங்கத்துக்கான நிலத்தை விற்பனை செய்தது போன்றவற்றில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மேலிடமே தா. பாண்டியன் மீது கடுமையான அதிருப்தியில் இருந்து வருகிறது. இதனால் அவரை தேசியப் பணிக்கு அழைத்துக் கொள்ளவும் தீர்மானித்துள்ளனர்.

மகேந்திரனுக்கு வாய்ப்பு
அத்துடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் ஜாதிய அடிப்படையிலும் கோஷ்டியை தா. பாண்டியன் உருவாக்கி வைத்திருப்பதாகவும் புகார் இருந்து வருகிறது. இதனால் தற்போதைய துணைச் செயலாளர் சி. மகேந்திரனை எப்படியாவது மாநிலச் செயலாளராக்கிவிடுவது என்று தா.பாண்டியன் அதிருப்தியாளர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.

பிளவு வேலை மும்முரம்
ஆனால் தா.பாண்டியன் ஆதரவாளர்களோ என்ன விலை கொடுத்தாலும் அவரையே மீண்டும் செயலாளராக்கிவிடுவது என்று இப்போதே பிளவு வேலைகளில் தீவிரம் காட்டத் தொடங்கிவிட்டனர்.

மாணவர் பெருமன்றத்தில்..
முதல் கட்டமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான அகில இந்திய மாணவர் பெருமன்ற மாநிலத் தலைவராக அரவிந்த்குமார், செயலாளராக தினேஷ், பொருளாளராக வழக்கறிஞர் ஜோதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications