சசிகலாவை நீக்கணும்னா 2 அணிகளும் சேரணும்.. தம்பிதுரை சொல்லும் புது ஐடியா
அதிமுக அம்மா கட்சியின் பொதுச் செயலாளராக உள்ள சசிகலாவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றால் இரு அணிகளும் இணைந்தால்தான் முடியும் என்று தம்பிதுரை புது ஐடியா கொடுத்துள்ளார்.
ஒசூர்: பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்குவது குறித்து பொதுக் குழுதான் கூடி முடிவெடுக்க முடியும் என்று லோக் சபா துணை சபாநாயகரும் அதிமுக அம்மா கட்சி எம்பியுமான தம்பிதுரை கூறியுள்ளார்.
ஜெயலலிதா மறைந்த பின்னர் உடைந்த அணிகள் இரண்டும் இணைவதற்கு ஓபிஎஸ் அணி, முக்கிய நிபந்தனையாக சசிகலாவையும் அவரது குடும்பத்தையும் கட்சி மற்றும் ஆட்சியில் இருந்து முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும் என்று கூறியது.
இந்த இணைப்புக் குறித்து மாற்றி மாற்றி இரு அணிகளும் பேசி வருகிறதே ஒழிய உருப்படியாக எதையும் செய்தபாடில்லை. சசிகலாவை நீக்கிவிட்டதாக கூறி ஓபிஎஸ் அணியினர் நாடகம் ஆடி வருவதாக ஓபிஎஸ் டீம்மில் இருக்கும் எம்பி மைத்ரேயன் இன்று கிண்டலடித்தார்.

நாடகம்
இந்த விஷயத்தில் அமைச்சர் ஜெயக்குமார் ஒரு நல்ல கை தேர்ந்த நடிகர் என்றும் மைத்ரேயன் குற்றம்சாட்டினார். மேலும், தனது பேச்சில் நேற்று கூட அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் சென்று சசிகலாவை பார்த்து வந்ததை குறிப்பிட்டிருந்தார்.

சசியை நீக்க புது ஐடியா
இந்நிலையில், இன்று ஓசூரில் எம்பி தம்பிதுரை செய்தியாளர்களிடம் பேசும் போது, சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றால் பொதுக் குழு கூடிதான் முடிவெடுக்க முடியும் என்று கூறியுள்ளார். பொதுக் குழு கூட வேண்டுமானால் இரு அணிகளும் விரைவில் இணைவது அவசியம் என்றும் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

பிளவு கிடையாது
அதிமுவில் பிளவு என்பதே கிடையாது என்று தம்பிதுரை தொடக்கத்தில் இருந்து சொல்லி வருவது போன்றே இன்றும் கூறினார். இரு அணிகளும் இணையும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக தம்பிதுரை நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி
அதே நேரத்தில், தமிழகத்தில் குழப்பம் நிலவி வருவதாகவும், நிலையான ஆட்சி இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளதற்கும் அவர் மறுப்பு தெரிவித்தார். மேலும், தமிழகத்தைப் பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு சீராக உள்ளதாக சான்றிதழ் வழங்கினார் தம்பிதுரை.












Click it and Unblock the Notifications