கரூரில் மீண்டும் வெற்றிவாகை சூடுவாரா தம்பித்துரை?
கரூர்: கரூர் தொகுதியில் அதிமுக எம்.பி வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார் தற்போதைய மக்களைவை எம்.பியும், அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளருமான தம்பித்துரை.
ஏற்கனவே கரூர் தொகுதியில் மூன்று முறையும், தர்மபுரி தொகுதியில் ஒருமுறையும் எம்.பியாக வெற்றி பெற்றுள்ள தம்பித்துரை 5 வதுமுறையாக வெற்றி பெறுவரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சிந்தகம் பள்ளியில், 1947 ம் வருடம் மார்ச் 15 ம் தேதி பிறந்தார். இவரது தந்தை முனுசாமி. டாக்டர் தம்பித்துரைக்கு டாக்டர் பானுமதி என்ற மனைவியும், இரண்டு மகள்கள் உள்ளனர். டாக்டர் தம்பிதுரை எம்.ஏ., எம்.பில், எம்.லிட் படித்துள்ள இவர் பொருளாதாராத்தில் டாக்டரேட் பெற்றுள்ளார்.

கோஷ்டியில்லாத எம்.பி
அதிமுகவில் அமைதிக்கு பெயர் போனவர் தம்பித்துரை என்கின்றனர். திமுகவில் கருணாநிதிக்கு அடுத்த இடத்தில் தொடர்ந்து நீடித்து வரும் பேராசிரியர் அன்பழகன் போல இவரும் தனக்கு என கோஷ்டி வைத்துக் கொள்ளாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என இருப்பார். அதனால் தான் அதிமுகவில் அன்று முதல் இன்று வரை ஜெயலலிதாவின் குட்புக்கில் நீண்டகாலமாக இடம்பெற்றுள்ளார்.
4 முறை எம்.பியானவர்
அதிமுக சார்பில் நான்குமுறை எம்.பியாக வெற்றி பெற்றுள்ளார். தர்மபுரி தொகுதியில் 1984ம் ஆண்டு வெற்றி பெற்ற அவர்
கரூர் தொகுதியில் 1989, 1998, 2009 ம் ஆண்டுகளில் எம்.பியாக வெற்றி பெற்றுள்ளார்.
திட்டங்கள் எதுவுமில்லை
கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை தம்பித்துரை கரூர் எம்.பியாகவும், கரூர் மாவட்ட பொறுப்பாளராகவும் உள்ளார். மேலும், கரூர் தொகுதியில் தம்பித்துரை மூன்று முறை வெற்றி பெற்றும் பெரிய அளவில் எந்த திட்டமும் கொண்டுவரவில்லை. தொகுதிவாசிகளுக்கு தன்னால் முடிந்த சிறு சிறு உதவிகளை மட்டுமே செய்துள்ளார்.
நாற்கரச்சாலை திட்டம்
பாஜக ஆட்சியில் இருந்த போது, கன்னியாகுமரி டூ காஷ்மீர் வரையிலான தங்க நாற்கர சாலைத் திட்டம் போடப்பட்டது. அப்போது தம்பித்துரை தரைவழி அமைச்சராக இருந்ததால், அந்த திட்டம் கரூர் மாவட்டத்தில் விரைவு பெற வழிவகை செய்தார்.
சாதனைகள் எதுவுமில்லை
மேலும், கரூர் - திருச்சி சாலையில் உள்ள லாலாபேட்டை மேம்பாலத்தை திமுக எம்.பி. கே.சி.பழனிசாமி முழு முயற்சியில் தான் கட்டினார் என்றாலும், அந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியவர் தம்பிதுரை என்பதை தவிர அவரது சாதனைப் பட்டியல் பெரிய அளவில் ஏதும் இல்லை.
கட்சி நிர்வாகிகளை தெரியாது
கரூர் லோக்சபா தொகுதியில் தம்பித்துரையை அனைவருக்கும் தெரியும். ஆனால், தம்பித்துரைக்கு தான் தொகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகளின் பலரின் முகமும், பெயரும் தெரியாது. அந்த அளவு ஒதுங்கியுள்ளார்.
இவருக்கு என ஆதரவாளர்கள் கூட்டம் இல்லை. எதிர்ப்பாளர்கள் கூட்டமும் இல்லை.
காங்கிரஸ் எம்.எல்.ஏவின் சம்பந்தி
தமிழக அரசியில் அரங்கில் காங்கிரஸ் கட்சியும், அதிமுக-வும் கிரியும், பாம்பும் போல. ஆனால், கரூர் அதிமுக எம்.பி. தம்பித்துரையின் இரண்டாவது பெண் லாஸ்யா. இதில் லாஸ்யா சென்னை ராமசந்திரா மருத்துவக் கல்லூரியில் டாக்டர் படிப்பு படித்து வந்தார். லாஸ்யா வகுப்புக்கு சென்று பாடம் எடுக்கும் போது வேலூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த ஞானசேகரின் மகன் நவீனுக்கும் காதல் மலர்ந்துள்ளது.
மகளின் திருமணத்திற்கு போகாதவர்
இந்த காதல் விவகாரம் இரு தரப்பு குடும்பத்தினருக்கும் தெரிய வர முதலில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கடைசியில் நவீன், லஷ்யா திருமணம் திருப்பதியில் நடந்தது. இதில் தம்பித்துரை கலந்து கொள்ளவில்லை.
காரணம், தனது மகள் எதிர்கட்சியைச் சேர்ந்த ஒருவரது குடும்பத்தில் சம்பந்தம் வைத்துக் கொண்டதால் தான். அந்த அளவு கட்சி மீதும் , கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதும் விசுவாசமும், பக்தியும் வைத்துள்ளார்.
துணை சபாநாயகர்
கடந்த 1985-1989 ம் ஆண்டு கால கட்டத்தில் லோக்சபா துணை சபாநாயகராக பதவி வகித்துள்ளார். 1998 - 99 ம் ஆண்டு சட்டம்,நீதி, கம்பெனி விவகாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2001-2006ம் ஆண்டு பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்வான அவர் தமிழக அமைச்சரவையில் கல்வி அமைச்சராக 2001-2002ம் ஆண்டு பதவி வகித்தார்.
தம்பித்துரைக்கு முக்கியத்துவம்
ஜெயலலிதா இம்முறை பிரதமர் பதவியை குறிவைத்து செயல்படுவதால், டெல்லியில் அதிமுக லாபி செய்ய தம்பித்துரை தான் சரியான நபர் என்பதால் தான், அவருக்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சராகும் வாய்ப்பு?
டெல்லியில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்பு தம்பித்துரைக்கு உள்ளதால், மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும் பட்சத்தில் தம்பித்துரை அமைச்சராகும் வாய்ப்பு உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
வெற்றி வாகை சூடுவாரா?
கரூர் தொகுதியின் அதிமுக வேட்பாளராக மீண்டும் தம்பித்துரையே அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கட்சியில் நிர்வாகிகளை அரவணைத்து சென்று வெற்றிவாகை சூடுவாரா என்பது அதிமுகவினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications