தாமிரபரணி ஆற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
நெல்லை: தாமிரபரணி ஆற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள காரணத்தால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தொடர்ந்து மூன்று மாதமாக பெய்து வருகிறது. இதனால் அணைகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பாபநாசம் அணை நிரம்பி விட்டதால் அணையின் பாதுகாப்பு கருதி உபரி அப்படியே திறந்து விடப்படுகிறது.
தாமிரபரணி ஆற்றில் மட்டும் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு, கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, வடக்கு பச்சையாறு ஆகிய அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அனைத்து அணைகளில் இருந்தும் உபரி நீர் வெளியேறி கொண்டிருப்பதாலும், ஸ்ரீவைகுண்டம் அணைக்கு இன்று இரவு 40 ஆயிரம் கன அடி நீர் வர வாய்ப்பு உள்ளது.
இதனால் ஆற்றில் நீர் வரத்து அதிகமாக இருக்கும் என்பதால் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆழ்வார்தோப்பு, சிவராமமங்கலம், புன்னக்காயல், ஆழ்வார்தோப்பு பகுதி மக்கள் மற்றும் தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றின் கரையோரம் வசித்தவர்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். நேற்று ஆற்றில் வெள்ளம் குறைந்ததால் அவர்கள் வீடுகளுக்கு திரும்பினர்.
இந்தநிலையில் தற்போது மீண்டும் வெள்ளப்பெருக்கு காரணமாக கரையோரம் வசிப்பவர்கள் மேடான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.