அமைச்சர் ஜெயக்குமார் வரம்பு மீறி பேசுகிறார்.. தங்கதமிழ்ச்செல்வன் ஆவேசம்
அமைச்சர் ஜெயக்குமார் வரம்பு மீறி பேசுவதாக டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
சென்னை: டிடிவி தினகரனை விமர்சனம் செய்து பேட்டி அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் வரம்பு மீறி பேசுவதாகவும் ஆண்டிப்பட்டி எம்எல்ஏ தங்கதமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ளார் டிடிவி தினகரன். இதையடுத்து ஜாமீனில் வெளியே வந்த தினகரன் சனிக்கிழமை சென்னை வந்தடைந்தார். அப்போது அவரது ஆதரவாளர்களுடன் திடீர் ஆலோசனை நடத்தப்பட்டது.
அதில் அமைச்சரவையில் மாற்றம் குறித்தும், தினகரன், சசிகலாவுக்கு எதிராக கருத்தை வெளிப்படுத்திய அமைச்சர் ஜெயகுமார், தங்கமணி, வேலுமணி, வீரமணி உள்ளிட்ட 4 பேரை பதவியிலிருந்து தூக்க வேண்டும் என்றும் ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனிடையே அமைச்சர் ஜெயகுமார், தினகரன் அதிமுகவில் தொடர்வது குறித்து வழிகாட்டுதல் குழுதான் முடிவு செய்யும் என்று கூறியுள்ளார். டிடிவி தினகரனுக்கு எதிரான அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பை எதிர்த்தும், தினகரனுக்கு ஆதரவாகவும், வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் குரல்கொடுத்தனர்.
தினகரனை நீக்க இவர்களுக்கு அதிகாரம் இல்லாத நிலையில் அவர்களுக்கு அந்த அதிகாரத்தை கொடுத்தது யார்? என்று கேள்வி எழுப்பி உள்ளனர். ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து விரைவில் செய்தி வரும் என்று தங்கதமிழ்ச்செல்வன் கூறியிருந்தார்.
இந்நிலையில் டிடிவி தினகரனை சந்தித்து எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், இன்று மாலை எம்எல்ஏக்கள் தங்கதமிழ்ச்செல்வன், வெற்றிவேல் ஆகியோர் தினகரனுடன் அவரது அடையாறு இல்லத்தில் ஆலோசனை நடத்தினர். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தங்கதமிழ்ச்செல்வன், அமைச்சர் ஜெயக்குமார் பேசியது அவரது தனிப்பட்ட கருத்து என்றும் அவர் வரம்பு மீறி பேசுகிறார் என்றும் குற்றம்சாட்டினார்.
மேலும் சசிகலா, டிடிவி தினகரனை விமர்சிக்க யாருக்கம் அதிகாரம் இல்லை. எதிராக விமர்சனம் செய்து பேட்டி அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறிய தங்கதமிழ்ச்செல்வன், அதிமுக ஒரு அணிதான், சசிகலா மட்டுமே பொதுச் செயலாளர் என்றும் கூறினார்.