ஆட்சியில் அமர துடிக்கும் ஸ்டாலின் கனவெல்லாம் ஒருபோதும் பலிக்காது.. தங்கதமிழ்ச்செல்வன் விளாசல்
ஆட்சியில் அமர துடிக்கும் மு.க.ஸ்டாலின் கனவு ஒருபோதும் பலிக்காது என்று தினகரன் ஆதரவு தங்கதமிழ்செல்வன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
மதுரை: திமுக செயல் தலவைர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அமர துடிக்கிறார். அவரது கனவு ஒரு போதும் பலிக்காது என்று ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ., தங்கதமிழ்செல்வன் கூறினார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து இன்று காலை தங்கதமிழ்ச் செல்வன் எம்.எல்.ஏ., விமானம் மூலம் மதுரை வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், அ.தி.மு.க. அம்மா அணியை சேர்ந்த 32 எம்.எல்.ஏ.க்கள் தினகரனை சந்தித்தோம். அதில் எந்த தவறும் இல்லை. 122 எம்.எல்.ஏ.க்களும் அ.தி.மு.க.தான். பிரிந்து சென்றவர்கள் விரைவில் எங்களுடன் வந்து சேருவார்கள்.
ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.க. அம்மா அணி பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு கொடுக்குமா? என்பதை இப்போது சொல்ல முடியாது. முதலில் வேட்பாளரை அறிவிக்கட்டும் பின்னர் அதுபற்றி பார்ப்போம். காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் எங்களிடம் ஆதரவு கேட்டால் பரிசீலிப்போம். ஆதரவு யாருக்கு என்பதை பொதுச் செயலாளர் தான் முடிவு செய்வார்.
அன்புமணி ராமதாஸ், ஸ்டாலின் உள்ளிட்டோர் இந்த ஆட்சியை பினாமி ஆட்சி என கூறி வருகின்றனர். தமிழகத்தில் ஆட்சியில் அமர மு.க.ஸ்டாலின் துடிக்கிறார். அதனால்தான் இப்படி பேசுகிறார். அவரது கனவு எல்லாம் ஒருபோதும் பலிக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.