விடுதியில் 'மிஸ்சான' பெண் எம்எல்ஏக்கள்.. கேள்வி கேட்ட நிருபர்களிடம் சீறிய தங்க தமிழ்செல்வன்
பெண் எம்எல்ஏ-க்கள் குறித்து ஏன் கேள்வி எழுப்புகிறீர்கள் என்று ஆண்டிப்பட்டி எம்எல்ஏ தங்கதமிழ் செல்வன் ஆவேசமடைந்தார்.
புதுவை: தலைமை கொறடா உத்தரவு குறித்து கருத்து தெரிவித்தபோது பெண் எம்எல்ஏ-க்கள் எங்கே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர்கள் குறித்து ஏன் கேட்கிறீர்கள் என்று தங்கதமிழ் செல்வன் கேள்வி எழுப்பினார்.
அதிமுக இணைப்புக்கு பின்னர், முதல்வருக்கு தாங்கள் அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறுவதாக 19 எம்எல்ஏ-க்கள் ஆளுநரை வெள்ளிக்கிழமை சந்தித்து தனித்தனியே கடிதங்களை கொடுத்தனர். இதன் பிறகு, அவர்கள் அனைவரும் புதுவையில் உள்ள ஒரு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
19 எம்எல்ஏ-க்களில் இரு பெண்கள் எம்எல்ஏ-க்கள் தங்களை விடுதியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் , வீட்டுக்கு போக வேண்டும் என்றும் அடம்பிடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இன்று அவர்கள் விடுதியிலேயே உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியை ஆண்டிப்பட்டி எம்எல்ஏ தங்கதமிழ் செல்வன் செய்து வருகிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் கட்சியின் விதிகளுக்கு மாறாக தலைமை கொறடாவின் அனுமதியின்றி ஆளுநரை சந்தித்ததற்காக 19 எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் மனு அளித்ததாக தலைமை கொறடா அரியலூர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக புதுவையில் விடுதியில் தங்கியுள்ள எம்எல்ஏ-க்கள் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது ஆண் எம்எல்ஏ-க்கள் அனைவரும் ஆஜராகியிருந்தனர். ஆனால் அந்த இரு பெண் எம்எல்ஏ-க்களை காணவில்லை.
இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு தங்கதமிழ் செல்வன், செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுக்க எல்லாரும் வரவேண்டும் என்பது அவசியம் இல்லை. அவங்கள பத்தி ஏன் கேக்குறீங்க என்றார். அதேபோல் மற்ற எம்எல்ஏ-க்களும், பெண் எம்எல்ஏ-க்கள் குறித்து ஏன் கேட்கிறீர்கள் என்று கொஞ்சம் காட்டமாகவே பதிலளித்தனர்.