தினகரன் புதிய கட்சி தொடங்கினால் இணையமாட்டோம்... தங்கதமிழ் செல்வன் திடீர் போர்க் கொடி
தினகரன் புதிய கட்சி தொடங்கினால் அதில் இணையமாட்டோம் என்று தங்க தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
ராசிபுரம் : தினகரன் புதிய கட்சி தொடங்கினால் அதில் நாங்கள் இணைய மாட்டோம் என்றும் நாங்கள் எப்போதும் அதிமுக உறுப்பினர்கள்தான் என்றும் தங்கதமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.
தினகரன், சசிகலாலவை ஒதுக்கிவைத்துவிட்டு அதிமுகவின் இரு அணிகளும் இணைந்ததால் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தனியாக செயல்பட்டு வந்தனர்.
இந்நிலையில் கொறடா உத்தரவை மீறியதாக அவர்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இருப்பினும் தினகரன் அதிமுகவை மீட்பார் என்ற நம்பிக்கையில் தங்க தமிழ் செல்வன், வெற்றி வேல், பழனியப்பன் உள்ளிட்ட 18 பேரும் அவருடனேயே உள்ளனர்.
குக்கர் சின்னத்தில் வெற்றி
இதனிடையே டிடிவி தினகரன் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த தினகரனிடம் குக்கர் சின்னத்தை வைத்து புதிய கட்சியை தொடங்குவீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
பட்டுபடாமல் பேசும் தினகரன்
அதற்கு மழுப்பலாகவே அதிமுகவை மீட்போம். குக்கர் சின்னத்தில் போட்டியிடுபவர்கள் போட்டியிட்டும், இரட்டை இலையில் போட்டியிட நினைப்பவர்கள் அதில் போட்டியிடட்டும் என்று தினகரன் பட்டும்படாமல் அளித்த பதில் குக்கர் சின்னத்தை அவர் விட மனமில்லை என்பதேயே காட்டுகிறது.
அதிமுக அம்மா அணி
மேலும் அதிமுக அம்மா அணி என்பதை தங்களுக்கு தர வேண்டும் என்று தினகரன் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனிடையே சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரின்போது வெளிநடப்பு செய்த தினகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில் , தனிக் கட்சி தொடங்கும் திட்டம் இல்லை என்றார்.
தினகரன் கட்சி
இதுபோல் தினகரன் மாற்றி மாற்றி பேசுவது அதிமுகவை மீட்க வேண்டும் என்று விடாபிடியாக உள்ள தங்க தமிழ் செல்வன் உள்ளிட்டோருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ் செல்வன் கூறுகையில், தினகரன் கட்சி ஆரம்பிக்க போறேன் என்கிறார்.
புதிய கட்சியில் சேரமாட்டோம்
அவர் எப்போதும் ஆரம்பிப்பார் என்பது எங்களுக்கு தெரியாது. நாங்கள் இன்னமும் அதிமுக உறுப்பினர்கள்தான். எனவே தினகரன் புதிய கட்சி தொடங்கினாலும் அதில் சேரமாட்டோம் என்றார் அவர்.