நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் சூழல் உருவாகும்.. சபாநாயகருக்கு தங்க தமிழ்செல்வன் எச்சரிக்கை
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் சூழல் உருவாகும் என சபாநாயகருக்கு தங்க தமிழ்செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
மதுரை: நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் சூழல் உருவாகும் என சபாநாயகருக்கு தினகரன் ஆதரவு எம்எல்ஏவான தங்க தமிழ்ச்செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முக்குலத்தோர் புலிகள் படைத் தலைவரும் திருவாடானை தொகுதி எம்எல்ஏவுமான கருணாஸ் கடந்த மாதம் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது முதல்வரை அவதூறாக பேசினார். இதையடுத்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்த நிலையில் கருணாஸை டிடிவி ஆதரவு எம்எல்ஏவான அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட கருணாஸ், டிடிவி தினகரனுக்கு ஆதரவாக உள்ள ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் உள்ளிட்டோர் கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகரிடம் அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தார்.
அதன்பேரில் அந்த 4 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் திட்டமிட்டுள்ளதாக நேற்று தகவல் வெளியானது. இந்நிலையில் மதுரை திருப்பரங்குன்றத்தில் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏவான தங்க தமிழ்செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், பயத்தால் 4 எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு முயற்சிக்கிறது என குற்றம்சாட்டினார். சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் சூழல் உருவாகும் என்றும் தங்கதமிழ்செல்வன் எச்சரித்தார்.