சசிகலா பரோலில் வர தமிழக அரசு என்ஓசி தர மறுக்கிறது... தங்கதமிழ்ச்செல்வன் புலம்பல்!
சசிகலாவிற்கு பரோல் தர கர்நாடக போலீசார் தயாராக இருப்பதாகவும் தமிழக இரசே இழுத்தடிப்பு செய்வதாகவும் தங்கதமிழ்ச்செல்வன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: சசிகலாவிற்கு பரோல் கிடைப்பது தாமதமாக தமிழக அரசு இழுத்தடிப்பு செய்வதே காரணம் என்று தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்கதமிழ்ச்செல்வன் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது : நானும், வெற்றிவேலும் ஆட்சியை கலைக்க உடந்தையாக இருந்ததாக ஒரு ஆதாரத்தை அளித்துள்ளனர்.
எங்களுக்கு அந்த வீடியோ ஆதாரத்தை அனுப்பியுள்ளனர், அந்த வீடியோ ஆதாரத்தை நானும் போட்டுப் பார்த்தேன்.
இதே இடத்தில் தொலைக்காட்சிகளுக்கு அளித்த அந்த பேட்டியில், பொதுச்செயலாளர் சசிகலா ஆணையை ஏற்று எடப்பாடி பழனிசாமியை முதல்வராக வெற்றி பெறச் செய்தோம். நம்பிக்கை வாக்கெடுப்பின் போது 122 எம்எல்ஏக்களும் டீ கூட குடிக்காமல் உட்கார்ந்து பழனிசாமி முதல்வராக வாக்களித்தோம் என்று சொல்லி இருக்கிறேன். இதில் ஆட்சியை கவிழ்க்கும் வகையில் நான் என்ன சொல்லியிருக்கிறேன்.
தகுதிநீக்கம் செல்லாது
ஓ.பன்னீர்செல்வம் திமுகவுடன் சேர்ந்து அரசுக்கு எதிராக வாக்களித்த போது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அது தான் உண்மையான ஜனநாயகப் படுகொலை, நிலைமை இப்படி இருக்க எங்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது. நீதிமன்றம் நிச்சயம் அதற்கு ஏற்ற நீதியை அளிக்கும்.
பரோல் தாமதத்திற்கு அரசே காரணம்
சசிகலாவிற்கு நேற்றே பரோல் கிடைத்திருக்கும், கர்நாடக அரசு பரோல் கொடுக்கத் தயாராக இருந்தாலும், தமிழக அரசு என்ஓசி கொடுக்கத் தயங்குகிறது. தமிழக காவல்துறை தடையில்லா சான்று தர இழுத்தடிப்பு செய்வதாலேயே பரோல் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இன்றோ நாளையோ பரோல் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
தாக்கம் இருப்பதால் பயம்
சசிகலா பரோலில் வந்தால் தாக்கம் இருக்காது என்று சொல்லும் ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் எதற்காக பதறுகிறார்கள். ஏன் பயப்படுகிறீர்கள், தாக்கம் இல்லை என்று சொன்னால், உடனடியாக என்ஓசி கொடுக்க வேண்டியது தானே. சசிகலா பரோலில் வந்தால் கட்சிக்காரர்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் வந்து பார்த்து செல்ல வாய்ப்பு இருக்கிறது.
நாங்கள் தான் அதிமுக அம்மா அணி
பயத்தின் காரணமாகவே என்ஓசி கொடுக்க தமிழக அரசு தாமதம் செய்கிறது என்று குற்றம்சாட்டுகிறோம். அதிமுக நாங்கள் தான் தேர்தல் ஆணையத்தின் முன்பு 6ம் தேதி ஆஜராவோம். இன்றும் அதிமுக அம்மா அணி நாங்கள் தான், ஓ.பன்னீர்செல்வம் தான் பிரிந்து சென்றார், அவர் தான் இப்போது எங்கள் அணியில் வந்து சேர்ந்துள்ளார். சசிகலா தான் பொதுச்செயலாளர், தினகரன் தான் துணைப் பொதுச்செயலாளர், நாங்கள் தான் உண்மையான அதிமுக எங்களுக்குத் தான் 100 சதவீதம் கட்சியும், சின்னமும் கிடைக்கும் இதில் மாற்றமில்லை என்று தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.