கூடங்குளம் 2-வது அணு உலையில் மீண்டும் தொடங்கியது மின்உற்பத்தி
கடந்த 5-ந்தேதி 2-வது அணு உலையின் டர்பனில் ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. பழுது சரிசெய்யப்பட்டு தற்போது மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது.
நெல்லை: கூடங்குளம் 2-வது அணு உலையில் டர்பனில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் முதல் அணு உலையானது பராமரிப்பு பணிக்காக கடந்த ஏப்ரல் மாதம் 13-ந்தேதி நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் கடந்த 5-ந்தேதி 2-வது அணு உலையின் டர்பனில் ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.
அதனை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வந்தன. சனிக்கிழமை காலை பணிகள் முடிந்து, 2-வது அணு உலை செயல்பட தொடங்கியது. தற்போது 360 மெகாவாட் வரை மின்உற்பத்தி நடந்து வருகிறது.
இந்த மின்உற்பத்தி படிப்படியாக அதிகரிக்கப்பட்டு இன்று அல்லது நாளை 900 மெகாவாட் மின்உற்பத்தியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் அணு உலையில் பராமரிப்பு பணிகள் மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு அடுத்த மாதம் முதல் வாரத்தில் முதல் அணு உலையில் மின்உற்பத்தி தொடங்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என கூடங்குளம் அணு உலை வளாக இயக்குனர் (பொறுப்பு) ஜின்னா தெரிவித்துள்ளார்.