தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல்.. ஓ.பன்னீர்செல்வம் உறுதி
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டு இருக்கிறார்.
சென்னை: தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டு இருக்கிறார். சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் உள்ளாட்சி தேர்தல் குறித்து கூறினார்.
தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. இந்நிலையில் 2016 நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திமுக தொடர்ந்த வழக்கு காரணமாக இந்த தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.
அதன்பின் உள்ளாட்சி தேர்தலை சென்று வருடம் மே 15-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் அறிவித்தது. ஆனால் தேர்வு காலம் என்பதால் அப்போது தேர்தலை நடத்த முடியாது என்று மாநில தேர்தல் ஆணையம் கூறிவிட்டது.
இந்த நிலையில் தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டு இருக்கிறார். இதற்கான பணிகள் நடக்கிறது என்று கூறியுள்ளார்.
அவர் தனது பேட்டியில் ''உள்ளாட்சி தேர்தலுக்கான அடிப்படை பணிகள் நடந்து வருகிறது. பணிகள் மிகவும் துரிதமாக முடிக்கப்பட்டு வருகிறது. அனைத்து பணிகளும் முடிந்த பின் தேர்தல் நடைபெறும்'' என்று குறிப்பிட்டார்.
உள்ளாட்சி அமைப்புகளுக்காக நியமிக்கப்பட்ட தனி அதிகாரிகளின் நியமனம் ஏற்கனவே மூன்று முறை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.