பாயாசத்திற்கு 10 நிமிஷம்... ஆனால் இந்த "விஷத்திற்கு" 2 நிமிஷம்தான்... ப்ளீஸ் சாப்பிடாதீங்க !
சென்னை: என் பிள்ளைக்கு நூடுல்ஸ் தான் பிடிக்கும் என பெருமையாக கூறுபவரா நீங்கள். அப்போ நீங்க கட்டாயம் இந்த செய்தியைப் படித்துத் தான் ஆகணும்.
அம்மாவின் திருப்தி சமையலை முடிப்பதில் மட்டுமல்ல, அதனை சாப்பிட்டுத் தீர்ப்பதில் தான் நிறைந்துள்ளது' எனக் கூறப்படுவதுண்டு. அந்தவகையில், குடும்பத்தாருக்கு என்னென்ன உணவுகள் நல்லது எனப் பார்த்து சமைக்கப் படுவது இன்று குறைந்து விட்டது.
இயந்திர உலகில் சமையலின் பளுவைக் குறைக்க உதவுபவை தான் இந்த நூடுல்ஸ் வகையறாக்கள். இரண்டே நிமிடத்தில் தயார் என்ற வசனமே பலரை நிம்மதி பெருமூச்சு விட வைத்தது. இதனால், மேல்நாட்டு துரித உணவுகள் ஆசையில் நமது தினையையும், வரகையும் மறந்து போனது இளைய தலைமுறை.
ஆனால், அதற்குப் பிரதிபலனாக நமக்குக் கிடைத்திருப்பது நோய்.. நோய்... நோய் மட்டுமே. கண்ணுக்குத் தெரியாமல் பாட்டில் அழகாக இருக்கிறது என்பதற்காக, தீங்கை விளைவிக்கும் விஷத்தைத் தான் நாம் நம் குழந்தைகளுக்கு உணவாகத் தந்து வருகிறோம். இதனை ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளது உத்திரப்பிரதேச அரசு.

மேகி நூடுல்ஸ்....
உத்தரப்பிரதேச அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து மேலாண்மை நிறுவனம் மேகி நூடுல்ஸில் 17.2 பிபிஎம் என்ற அளவுக்கு ஈயம் கலந்துள்ளதைக் கண்டுபிடித்துள்ளது. சாதாரணமாக உணவுப் பொருட்களில் 0.01-2.5 பிபிஎம் என்ற அளவில் மட்டுமே ஈயம் கலந்திருக்க அனுமதி உண்டு.

ஐ.கியூ குறையும்...
அனுமதிக்கப்பட்டதை விட குறைந்த அளவு ஈயம் சேர்க்கப்பட்ட உணவைச் சாப்பிடும் குழந்தைகளின் மூளைத்திறன் (ஐ.கியூ) குறையும், ரத்தசோகை ஏற்படும் என்கிறது உலக சுகாதார நிறுவனம். அப்படியென்றால், இவ்வாறு அனுமதிக்கப்பட்ட அளவைவிட, ஏழு மடங்கு அதிகம் ஈயம் கலந்த உணவைச் சாப்பிட்டால், நினைக்கும் போதே பகீர் என்கிறது.

ரசாயனம் கலந்த மைதா...
சரி, அப்படி அந்த நூடுல்ஸில் என்ன தான் இருக்கிறது. ஏன் இதை குழந்தைகள் இப்படி போட்டி போட்டுச் சாப்பிடுகிறார்கள் எனத் தெரிந்து கொள்ளலாம். நூடுல்ஸ் என்பது மைதாவில் சில ரசாயனங்கள் சேர்த்து தயாரிக்கப் படுகிறது. மைதாவே கோதுமையின் கழிவிலிருந்து தான் தயாரிக்கப் படுகிறது என்பது நமக்கு ஏற்கனவே தெரிந்தது தான்.

கேடுகள் மட்டுமே...
மற்ற உணவுகளில் உள்ளது போல் நூடுல்ஸில் நார்ச்சத்து, புரதச் சத்து, வைட்டமின்கள் எனச் சொல்லிக் கொள்ளும்படி எந்தச் சத்துக்களும் இல்லை. கொழுப்பு, உப்பு, மாவுச்சத்து, செயற்கை சுவையூட்டி ரசாயனங்கள் போன்றவை மட்டுமே பிரதானமாக உள்ளன.

அதிக ஈயம் ஆபத்து...
பொதுவாக ஈயமானது அதிக விஷத்தன்மை கொண்டது. இதனைச் சாப்பிட்டால் உடல் உறுப்புகள் பாதிக்கும். நரம்புப் பிரச்சினைகள், கடுமையான வயிற்று வலி, வாய் மற்றும் தொண்டைப் பிரச்சினைகள், தலைவலி என உபாதைகளைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். கருவுற்ற பெண்கள் ஈயத்தை எடுத்துக் கொண்டால் அது வயிற்றிலுள்ள கருவுக்கு ஆபத்து என்கிறது மருத்துவ உலகம்.

துரித உணவுகள்...
தினை, வரகு என சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்ந்தனர் நம் முன்னோர்கள். அவர்களில் இருந்து சிறிது மாறி இட்லி, தோசை எனச் சாப்பிடத் தொடங்கினோம் நாம். ஆனால், நமது அடுத்த தலைமுறையோ ஆரம்பமே நூடுல்ஸ், பீட்சா, பர்கர் என அதகளம் செய்கிறது.

உடல் பருமன்....
ஆனால், இவை அனைத்தையும் நமது உடல் ஏற்றுக் கொள்கிறதா என்றால், அது தான் இல்லை. பாரம்பரிய உணவுகளை மட்டுமே சாப்பிட்டு பழக்கப்பட்ட நமது உடல், சுவைக்காக நூடுல்ஸை சாப்பிட்டாலும், அவை செரிக்க இரண்டு நாட்கள் ஆகும். அதற்குக் காரணம் அவற்றில் சேர்க்கப் பட்டுள்ள ரசாயனங்கள் ஆகும். இத்தகைய உணவைச் சாப்பிடுவதால் உடல் பருமன் ஏற்படுகிறது. உடல் உறுப்புகள் பாதிக்கப் பட்டு நாளடைவில் நோயாளி ஆகிறோம்.

குழந்தைகள் தான் டார்கெட்...
நூடுல்ஸ் கம்பெனிகளின் முதல் டார்கெட் குழந்தைகள் தான். காரணம் குழந்தைகள் மூலம் வீடுகளில் எளிதாக அவர்களின் பொருட்களை உட்கொள்ளச் செய்ய முடியும். எனவே, குழந்தைகளை மீண்டும் மீண்டும் நூடுல்ஸ் சாப்பிட வைக்க வேண்டும் என்பது அவர்களது இலக்கு.

சுவையூட்டி உப்பு...
இதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த பொருள் தான் மோனோசோடியம் க்ளூட்டமேட் என்ற சோடியம் உப்பு. ஒரு வகை சுவையூட்டியான இதற்கு, தன் சுவையால் ஒருவரை அடிமையாக்கும் குணம் உள்ளது. குறிப்பாக, குழந்தைகளை மீண்டும் மீண்டும் இதே உணவைச் சாப்பிட வைப்பதற்காக, நூடுல்ஸில் மோனோ சோடியம் க்ளுட்டமேட்டின் அளவை அதிகம் சேர்த்துத் தயாரிக்கின்றனர்.

கவனச் சிதறல்...
அதிகப்படியான இந்த உப்பால் உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, மூட்டு வீக்கமடைதல், மறதி, கவனச்சிதறல் போன்ற பாதிப்புகள் வரலாம். மேலும், அடிக்கடி தலைவலி, சிறுநீரகப் பாதிப்பு போன்ற அவஸ்தைகள் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம்.

விழித்துக் கொள்ளும் மாநிலங்கள்...
‘குறிப்பிடப்பட்டுள்ள அளவுக்கு மேல் ரசாயனக் கலவை உள்ளது. எனவே நூடுல்ஸை தடை செய்ய வேண்டும்' என்ற உத்திரப்பிரதேச அரசின் உத்தரவு மேலும் பல மாநிலங்களின் கண்களைத் திறந்து விட்டுள்ளது. நமது பாரம்பரிய உணவுகளைச் சாப்பிடத் தொடங்கினாலே, இத்தகைய கேடான உணவுகள் பக்கம் நம் கவனம் சிதறாது.












Click it and Unblock the Notifications