கிராமப்புற ஏழை மாணவர்களின் டாக்டர் கனவைத் தகர்த்த நீட் தேர்வு...தமிழக மாணவி உருக்கம்
நீட் தேர்வை வைத்து,கிராமப்புற ஏழை மாணவ மாணவியரின் டாக்டர் கனவை மத்திய அரசு தகர்த்துவிட்டது என்று நீட் தேர்வு எழுதிய மாணவி தெரிவித்துள்ளார்.
சென்னை: நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ படிப்பில் சேர்க்கை நடைபெற உள்ளதால், கிராமப்புற ஏழை மாணவர்களின் டாக்டர் கனவு தகர்ந்தது என்று தமிழ்வழியில் படித்து நீட் தேர்வு எழுதிய சென்னை மாணவி கோமதி கூறியுள்ளார்.
நீட் தேர்வின் அடிப்படையில்,இந்திய அளவில் மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெற உள்ளதால் கிராமப்புற ஏழை மாணவர்கள் இனி டாக்டராக வருவது கானல் நீர்தான் என்கிறார்கள் பள்ளி மாணவர்கள்.
அதிலும் தமிழ்வழியில் படித்தால் அவ்வளவுதான் நீட் தீர்வை எழுதுவதோடு டாக்டர் கனவை கலைத்துக்கொள்ள வேண்டியதுதான் என்றும் மாணவ மாணவியர் கருத்துத் தெரிவித்துள்ளனர். நீட் தேர்வு வினாக்கள், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டிருக்கும்.
அதனால் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்து மேற்கொண்டு 2 ஆண்டுகளாவது நீட் தேர்வுக்காக சிறப்புப் பயிற்சியும் எடுத்த மாணவர்கள்தான் இதில் அதிக மதிப்பெண் பெறமுடியும் என்று கருத்துக்கள் மாணவர்கள் மத்தியில் உலவுகின்றன.

தேர்வை எதிர்கொள்ள திணறிய தமிழ் மாணவர்கள்
நேற்றுக்கு முன்தினம் தமிழகத்தில் நீட் தேர்வு நடந்தது. தமிழக அரசின் பாடத்திட்டத்தின் மூலம் +2 படித்தவர்களுக்கு இந்தத் தேர்வு சிரமமாக இருந்துள்ளது. தமிழ் வழியில் படித்த பல மாணவர்களும் இதே நிலையில்தான் இருந்துள்ளனர். அதனால் அவர்கள் நீட் தேர்வை சரியாக எதிர்கொள்ள முடியாமல் திணறியுள்ளனர்.

அரசுப்பள்ளி மாணவி
சென்னை நெற்குன்றத்தில் வசித்து வருகிறேன். அங்குள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 10ம் வகுப்பு வரை படித்தேன். எஸ்.எஸ்.எஸ்.சி. தேர்வில் 500-க்கு 466 மதிப்பெண் பெற்றேன். பின்னர் எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் +2 முடித்தேன்.

பெற்றோர்,ஆசிரியர் வழிகாட்டல்
எனது படிப்புக்கு தந்தை மூர்த்தி, தாய் எம்.ஆதிலட்சுமி ஆகியோர் உறுதுணையாக இருந்தார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக நான் நீட் தேர்வு எழுத எனது பள்ளி தலைமை ஆசிரியை புஷ்பா உள்ளிட்ட
ஆசிரியர்கள் உறுதுணையாக இருந்தனர். நான் நீட் தேர்வை அடையார் பாலமந்திர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் தமிழில் எழுதினேன்.

இனி கிராமப்புற மாணவர்களுக்கு எட்டா கனிதான்
நீட் தேர்வு எழுத வேண்டியநிலை வந்ததால் தமிழகத்தில் கிராமப்புறத்தில் படித்த மாணவர்கள் பலருக்கு மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்கும் என்ற நிலை போய்விட்டது. பயிற்சி கட்டணம் ரூ.15 ஆயிரம், ரூ.20 ஆயிரம் என்றதால் எனக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி மையத்தில் கட்டணம் செலுத்தி படிக்க முடியவில்லை.

நீட் பயிற்சி மையங்களும் இல்லை
கிராமப்புறங்களில் இதற்கான பயிற்சி மையங்களும் இல்லை. ஏழைகள் நகர்ப்புறங்களில் உள்ள பயிற்சி மையங்களுக்கு சென்று படிக்க முடியவில்லை. இதன் காரணமாக அவர்களால் சரியாக எழுத முடிந்திருக்காது.

நீட் வினாக்கள் கடினமானவை
நீட் தேர்வில் 11-ம் வகுப்பு பாடங்களில் இருந்து பல கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. உயிரியல் பகுதியில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் எளிமையாக இருந்தன. வேதியியல் கேள்விகள் சில கடினமாக இருந்தன. இயற்பியல் கேள்விகள் சற்று கடினமாக இருந்தன. மொத்தத்தில் நன்றாக எழுதி உள்ளேன்.

டாக்டர் சீட் கிடைக்கும் என்று நம்பிக்கை
எனவே எனக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன். இருந்தாலும் நீட் தேர்வு தேவை இல்லை என்பதே என் கருத்து. நீட்தேர்வால் கிராமப்புறத்தில் படித்த ஏழை மாணவர்களின் டாக்டராகும் கனவு தகர்ந்தது." என்று மாணவி கோமதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications