தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்.. உங்க குழந்தைக்கு மறக்காம கொடுத்துடுங்க!
தமிழகத்தில் முதற்கட்டமாக இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் நடைபெற உள்ளன.
நாடு முழுவதும், ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ நோய் வராமல் தடுப்பதற்காக, சொட்டு மருந்து அளிக்கும் திட்டம் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் கட்டமாக போலியோ சொட்டுமருந்து முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 30-ம் தேதியும் நடைபெறும்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் முதல் தவணை இன்றும், இரண்டாம் தவணை 30-ந்தேதியும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 43,051 மையங்களில் சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இன்று நடைபெற உள்ள போலியோ சொட்டு மருந்து முகாமில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுகிறார்கள். பெற்றோர்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு இந்தியாவை போலியோ இல்லாத நாடாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.