தமிழகத்தின் முதல் வாக்காளரான ‘தீபா’விடம் வாக்காளர் அடையாள அட்டையே கிடையாதாம்...
சென்னை: தமிழகத்தின் முதல் வாக்காளர் என்ற பெருமையைப் பெற்ற வாக்காளரான தீபாவுக்கு இன்னும் வாக்காளர் அட்டையே வழங்கப்படவில்லையாம்.
இந்தியாவின் 16வது லோக்சபாவை அமைக்கும் தேர்தல் 9 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில் 6வது கட்டமாக இன்று தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளுக்கு காலை 7 மணி தொடங்கி தேர்தல் நடந்து வருகிறது.
இத்தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதிகள் பட்டியலில் தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி முதல் தொகுதி என்ற பெருமையை தக்க வைத்து உள்ளது.

இத்தொகுதியில் உள்ள தீபா என்ற இளம்பெண் தான் தமிழகத்தின் முதல் வாக்காளர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார். இவர் கும்மிடிப்பூண்டியை அடுத்த எகுமதுரை ஊராட்சியில் முதல் வார்டில் வசித்து வருகிறார்.
தற்போது 30 வயதாகிறது தீபாவிற்கு. ஆனால், வாக்காளர் பட்டியலில் அவருடைய வயது 53 என தவறாக அச்சடிக்கப் பட்டுள்ளதாம். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தீபா கூறியிருப்பதாவது, ‘திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. ஆனால் குழந்தைகள் ஏதும் இல்லை. கும்மிடிப்பூண்டி சட்டசபைத் தொகுதியில் உள்ள முதல் ஊராட்சியான எகுமதுரையில் முதல் வார்ட்டில் முதல் பெயராக உள்ள நான் தான் தமிழ்நாட்டிற்கே முதல் வாக்காளர் என்று பலரும் சொல்லும்போது பிரம்மிப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
ஆனால், இந்த முதல் வாக்காளரிடம் இதுவரை எந்த அரசியல் கட்சியும் ஓட்டு கேட்டு வரவில்லை. வாக்காளர் பட்டியலில் எனது வயது 30 என்பதற்கு பதில் 53 என தவறாக அச்சிடப்பட்டு உள்ளது.
அதை விட பெரிய விஷயம் என்னவென்றால் முதல் வாக்காளர் என்று பெருமைப்படும் எனக்கு இதுவரை வாக்காளர் அடையாள அட்டை கூட வந்து சேரவில்லை. ஆனால் பூத் சிலீப் கொடுத்துட்டாங்க. கடந்த தேர்தலின்போது கூட வாக்காளர் அடையாள அட்டை இல்லாததால் வேறு ஒரு போட்டோ அடையாள சான்றை காண்பித்துதான் நான் ஓட்டு போட்டேன்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications