சென்னையில் கனமழை, வெள்ளத்தை 5 நாட்களுக்கு முன்பு அறிவிக்கும் முன்னெச்சரிக்கை அமைப்பு தொடக்கம்
சென்னையில் வெள்ள பாதிப்புகளை தடுக்க வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பு திறக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: வெள்ள பாதிப்புகளை தடுக்க வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பு திறக்கப்பட்டுள்ளது
தமிழகத்திற்கு அதிக மழை பொழிவை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னை மாநகர் வெள்ளத்தில் தத்தளித்தது.
இந்நிலையில் இந்த ஆண்டு மழை மற்றும் வெள்ள பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் சென்னையில் முன்னெச்சரிக்கை அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
5 நாட்களுக்கு முன்பே
இதுதொடர்பாக சென்னை எழிலகத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, கனமழை மற்றும் வெள்ளத்தை 5 நாட்களுக்கு முன்பே தெரிவிக்கும் வகையில் வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இணையதளத்தில் புகார்
தமிழகத்தில் மழை பாதிப்பு தொடர்பாக http://gdp.tn.gov.in என்ற இணையதளத்தில் புகார்கள் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
வருவாய் துறையினர் ஒப்பந்தம்
மழையின் நிலை மற்றும் தீவிரம் குறித்து முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் வகையில் தேசிய கடல் ஆராய்ச்சி மையத்துடன் வருவாய் துறையினர் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
5000 அலுவலர்கள் நியமனம்
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். மக்களின் புகார் தொடர்பான மனுக்களை பரிசீலிக்க 5000 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 32 மாவட்டங்களிலும் நேரடியாகவும், காணொலிக்காட்சி மூலமாகவும் ஆய்வு பணிகள் தொடரும். இவ்வாறு அமைச்சர் ஆர்பி உதயக்குமார் தெரிவித்தார்.