ஆவி பறக்க மெது வடை.. திறந்து பார்த்தால் நிஜமாவே ஒரு உயிர் ஆவியாக இருக்கு.. அதிர்ந்த தர்மபுரி
தர்மபுரி: தர்மபுரியில் உள்ள ஒரு டீக்கடையில் வடையில் பல்லி இருந்தது. உளுந்த வடையில் பல்லி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் கடை உரிமையாளரிடம் காண்பித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார், இதையடுத்து பல்லி வடை போட்ட கடை உரிமையாளருக்கு, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ரூ.5000 அபராதம் விதித்தனர்.
தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு துறை அடிக்கடி ஓட்டல்களில் ரெய்டு நடத்தி வருகிறது. அதேபோல் ஓட்டல்களில் உணவுகள் சரியில்லை என்றாலோ, கெட்டுப்போன உணவு என்றாலோ, கரப்பான் பூச்சி, பல்லி அல்லது ஏதேனும் உயிரினங்கள் விழுந்த உணவுகளை பரிமாறினாலோ அந்த ஓட்டல்களில் ரெய்டு நடத்தி, தரத்தினை சோதித்து அபராதம் விதிக்கிறது உணவு பாதுகாப்புத்துறை.

அதேபோல் கெட்டுப்போன உணவுகளை உடனே பறிமுதல் செய்து சீல் வைக்கும் நடவடிக்கையிலும் அதிகாரிகள் ஈடுபடுகிறார்கள். எனினும் புகாரின் பேரில் மட்டுமே பெரும்பாலும் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தள்ளுவண்டி கடை தொடங்கி மிகப்பிரபலமான ஓட்டல்கள் வரை இந்த ரெய்டில் சிக்கி உள்ளன.
இந்நிலையில் தருமபுரி நகராட்சி அலுவலகம் அருகே கந்தசாமி வாத்தியார் தெருவில் ஒரு டீக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த டீக்கடை ஆவி பறக்க உளுந்தவடை அதாவது மெதுவடை விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. சுடச்சுட வடை போடுவதை பார்த்த சண்முகம் என்பவர் வாங்கி சாப்பிட வடையை ஆசையாய் வாங்கி உள்ளார். உள்ளே வடையை பிரித்த போது அதில் இறந்த நிலையில் பல்லி ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அந்த பல்லி வடையை கடை உரிமையாளரிடம் காண்பித்து சண்முகம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது. பலரும் கடை மீது நடவடிக்கை எடுக்குமாறு உணவுப்பாதுகாப்பு துறையை டேக் செய்து கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடை உரிமையாளரிடம் நேரடி விசாரணை நடத்தினர். மேலும் அந்த கடை சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் கடை உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் கடையை சுகாதாரமாக வைக்க அறிவுறுத்தியதோடு மீண்டும் தாங்கள் சோதனைக்கு வரும் போது சுகாதாரமற்ற முறையில் இருந்தால் கடையை சீல் வைக்க நேரிடும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரித்துவிட்டு சென்றனர்.
தர்மபுரி மட்டுமின்றி தமிழகம் முழுவதுமே சாலையோர கடைகளில் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் மற்றும் பலகாரங்கள் விற்கப்படுகிறது. இதேபோல் அசைவ உணவகங்களில சுகாதாரமற்ற முறையில் சமைக்கப்படுகிறது. அவற்றின் மீது ஒவ்வொரு வாரமும் திடீர் சோதனை நடத்தினால் தான் சரியான உணவு மக்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று சொல்கிறார்கள் நெட்டிசன்கள்.












Click it and Unblock the Notifications