செவ்வாய் ஆராய்ச்சியில் கலக்கும் இந்திய விஞ்ஞானிகளை இருட்டடிப்பு செய்கிறதா 'தி மார்ஷியன்'?
சென்னை: கிளாடியேட்டர், திரைப்பட புகழ் ரிட்லே ஸ்காட் இயக்கத்தில் 'தி மார்ஷியன்' என்ற அறிவியல் புனைவுத் திரைப்படம் (சயின்ஸ் ஃபேண்டசி) கடந்த வாரம் வெளியானது. ஆண்ட்டி வெய்ர் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு, உருவாக்கப்பட்ட இப்படத்துக்கு நாவலின் பெயர்தான் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தில், இந்திய விண்வெளி விஞ்ஞானிகளை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்வது போல காட்சியமைப்புகள் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
செவ்வாய் ஆராய்ச்சி
செவ்வாய் கிரகத்துக்கு ஆராய்ச்சிக்காகச் செல்லும் நாசா ஆய்வு குழு, கடும் பனிப் புயலால் பாதிக்கப்படுகிறது. எனவே, அவசரமாக பூமியை நோக்கி கிளம்புகிறது குழு. ஆனால் புயலில் சிக்கி தூக்கி எறியப்படுகிறார், படத்தின் ஹீரோவும், அந்த பயண குழுவின் ஒரு விஞ்ஞானியுமான மார்க் வாட்னி.
தப்பிய ஹீரோ
மார்க் இறந்திருக்கலாம் என எண்ணிய குழுவினர் அவரை தேடாமல் பூமிக்கு கிளம்புகின்றனர். ஆனால், மார்க் வாட்னி இறக்கவில்லை. உயிர்பிழைத்து, தனது குழு விட்டுச்சென்ற பொருட்களுடன் எப்படி செவ்வாய் கிரகத்தில் உயிர்வாழ்கிறார் என்பதை சுவாரசியமாக சொல்கிறது திரைப்படம்.
உயிரோடு மீண்டாரா?
மார்க் வாட்னி உயிரோடு இருப்பதை தாமதமாக அறியும், நாசா, அவரை மீட்க எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற்றதா என்பது மிச்சக்கதை. படத்தில் மார்க் வாட்னி வேடமேற்றிருக்கும் ஹாலிவுட் நடிகரான மேட் டாமன், கிறிஸ்டோபர் நோலனின் இன்டர்ஸ்டெல்லர் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்தவர்.
3டி கலக்கல்
மேட் டாமன், தனக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்துள்ளார். செவ்வாயில் காய்கறி வளர்க்கும் காட்சிகள் அருமை. 3டி ஒளிப்பதிவு, கிளைமேக்ஸ் விண்வெளி காட்சிகளின்போது பெரிதும் ஈர்க்கின்றது.
இந்தியர்கள் இருட்டடிப்பு
செவ்வாய் கிரகம் குறித்த புரிதலை நேரடியாகவும், தண்ணீர், மரம், செடி போன்றவற்றை பாதுகாக்க வேண்டியதன் அத்தியாவசியத்தை மறைமுகமாகவும் 'தி மார்ஷியன்' ரசிகர்கள் மனதில் பதிய வைக்கிறது. ஆனால், விண்வெளித்துறையில் முன்னணி வகிக்கும் இந்தியாவும், அதன் விஞ்ஞானிகளும் இதில் இருட்டடிப்பு செய்யப்படுகிறார்கள் என்பது நெருடல் அளிக்கிறது.
மங்கள்யான் சாதனை
கடந்த ஆண்டு, இந்தியா ரூ. 450 கோடி மட்டுமே செலவழித்து அனுப்பிய மங்கள்யான் செயற்கைக்கோள், செவ்வாய் கிரகத்துக்கு சென்று போட்டோக்களை கிளிக்கி தள்ளிக்கொண்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா ஆகிய நாடுகள் மட்டுமே விண்கலம் அனுப்பியுள்ளன.
முதல் முயற்சி
முதல் முறை அந்தநாடுகள் அனுப்பிய விண்கலம் தோல்வியை தழுவியது. அடுத்தடுத்து முயற்சிகளில் தான் அவைகள் வெற்றி கண்டன. ஆனால் இந்தியா தனது முதல் முயற்சியிலேயே வெற்றி கண்டு உலக விண்வெளி அரங்கில் புதிய சாதனை படைத்தது.
சீனாவுக்கு முக்கியத்துவம்
இப்படிப்பட்ட இந்தியாவை மருந்துக்கும், செவ்வாயை மையப்படுத்தி உருவான 'தி மார்ஷியன்' காட்டவில்லை. நாசாவின் தரைக்கட்டுப்பாட்டு குழுவில் இடம்பெற்றுள்ள விஞ்ஞானிகளில் வெள்ளைக்காரர்கள், கருப்பினத்தவர்கள், சீனர்கள் இருப்பது போல படத்தில் காண்பிக்கப்படுகிறது. மார்க் வாட்னியை காப்பாற்ற நாசா அனுப்பும் விண்கலம் பாதியிலேயே வெடித்து சிதறுகிறது. இதையடுத்து நாசா உதவிகேட்பது பெய்ஜிங்கிலுள்ள, சீன நாட்டு விஞ்ஞானிகளிடம் என்பது போல காட்சி உள்ளது.
இந்தியாவில் மக்கள் இல்லையா?
மேலும், மார்க் வாட்னியை காப்பாற்றி பூமிக்கு கொண்டுவரும் இறுதிகட்ட முயற்சியின்போது, அதை தொலைக்காட்சிகள் நேரலை செய்கின்றன. இதை பார்க்க நியூயார்க், சீனாவின் பீஜிங், ஐரோப்பிய நாடுகளில் மக்கள் கூட்டம் தெருக்களில் இறங்கி ஆயிரக்கணக்கில் குழுமியிருப்பதை போல காட்சி காண்பிக்கப்படுகிறது. அப்போதும், இந்தியாவில் மக்கள், அந்த நிகழ்வை எதிர்பார்ப்பது போல காட்சி அமைக்கப்படவில்லை.
முன்னோடிகள் நாம்தான்
செவ்வாய் கிரகம் சிவப்பு வண்ணம் கொண்டது, வெப்பமானது என்பதையெல்லாம் நாசா இன்று சொல்கிறது. ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, சிவப்பு வண்ணத்தை குறிக்கும் வகையில் 'செவ்வாய்' என அந்த கிரகத்துக்கு பெயர் சூட்டி, அது உஷ்ணத்தை தரும் கிரகம் என ஜோதிட சாஸ்திரம் வகுத்து, அதற்கு, முருகன்தான் அதிபர் என்று கூறி, அழகு பார்த்தனர் தமிழர்கள். மெஞ்ஞானத்தை தவிர்த்து விஞ்ஞானத்தை பார்த்தாலும், மங்கள்யானுக்காகவாவது இந்தியாவை இந்த படம் தொட்டுச்சென்றிருக்க வேண்டும்.
கிண்டல் கார்ட்டூன்
இந்தியாவின் சாதனைகளை இருட்டடிப்பு செய்து, அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதில் வெள்ளையர்களை அடிக்க முடியாது. மங்கள்யான் வெற்றிகரமாக ஏவப்பட்டதும், நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட கார்டூனில், மாடு மேய்க்கும் ஒருவர் (இந்தியர்), முன்னணி விண்வெளி ஆராய்ச்சி நாடுகளின் பிரதிநிதிகள் அமர்ந்திருக்கும் இடத்துக்கு வந்து கதவை தட்டுவதை போல கார்ட்டூன் வெளியிட்டிருந்தது. பின்னர், இந்தியர்கள் எதிர்ப்பால் மன்னிப்பு கேட்டிருந்தது நினைவிருக்கலாம்.