''சிரிப்புடா!''... மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள வித்தியாசமே சிரிப்புதான்...! - ஓபிஎஸ்
மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள ஒரே வித்தியாசமே சிரிப்புதான் என்று கூறியுள்ளார் முதல்வர் ஓ பன்னீர் செல்வம்.
சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் வற்புறுத்தலாம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்ட முதல்வர் பன்னீர் செல்வம், நேற்று ஜெயலலிதா சமாதியில் 40 நிமிடங்கள் தியானம் செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்து, சசிகலாவால் தனக்கு நேர்ந்த அவமானங்கள், நிர்பந்தங்களை அம்பலப்படுத்தினார்.
இதைத் தொடர்ந்து நள்ளிரவில் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, திமுகவின் சதிதான் பன்னீர் செல்வத்தின் திடீர் ஆவேசத்துக்குக் காரணம் என்றார். ஆதாரமிருக்கிறதா என்று கேட்டதற்கு, 'எதிர்கட்சித் தலைவர் முக ஸ்டாலினைப் பார்த்து சிரித்தார் ஓபிஎஸ்... ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் இப்படித்தான் நடந்து கொள்வதா?' என்று குற்றம் சாட்டினார்.
இதற்கு உடனுக்குடனே பதிலளித்துள்ளார் முதல்வர் பன்னீர்செல்வம்.
அவர் கூறுகையில், "ஒரு முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் ஒருவருக்கொருவர் பார்த்து சிரித்துக் கொள்வது குற்றமா? மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள ஒரே வித்தியாசமே சிரிப்புதான். மிருங்களால் சிரிக்க முடியாது.
நான் இதுவரை சொன்னது பத்து சதவீதம்தான்," என்று அதிரடியாக பதிலளித்துள்ளார்.