விடுதலை சிறுத்தைகள் கொடி கம்பம் இரவோடு இரவாக அகற்றம்! திருமாவளவனுக்கு அவசரமாக பறந்த போன் கால்!
கள்ளக்குறிச்சி: வட்டாட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக் கம்பம் இரவோடு இரவாக அகற்றப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விசிக கொடிக்கம்பத்தை நடுவதற்கு வட்டாட்சியர் எதிர்ப்பு தெரிவிக்கும் விவகாரத்தையும், ஆளுங்கட்சியின் கூட்டணிக் கட்சியான நமக்கே இந்த நிலையா எனவும் திருமாவை தொடர்பு கொண்டு கள்ளக்குறிச்சி விசிக நிர்வாகிகள் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துவிட்டனர்.

கடந்த பிப்ரவரி மாதம் திருவாரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் பங்கேற்று பேசிய விசிக தலைவர் திருமாவளவன், ''கூட்டணிக் கட்சிக்காரனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி என்றால் அது கசப்பதாகவும் ஆனால் தங்கள் ஓட்டு மட்டும் அவர்களுக்கு இனிப்பதாகவும்'' கூறி பரபரப்பை பற்ற வைத்திருந்தார்.
அதுமட்டுமல்ல பல இடங்களில் கூட்டணிக் கட்சிக்காரர்கள் தான் தங்கள் கட்சி கொடியை ஏற்றவிடுவதில்லை என்ற பகிரங்க குற்றச்சாட்டையும் இந்தாண்டு பிப்ரவரியில் திருவாரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருமா முன்வைத்திருந்தார்.
இந்தச் சூழலில் கள்ளக்குறிச்சி மாவட்டம் அ.வாசதேவனூரில் நடப்பட்ட விசிக கொடிக்கம்பம், அனுமதி பெறாமல் வைக்கப்பட்டதாக கூறி வட்டாட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில் இரவோடு இரவாக காவல்துறையினரால் அகற்றப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல தன்னை ஒருமையில் திட்டி மிரட்டல் விடுத்ததாகவும் பெண் வட்டாட்சியர் அளித்த புகாரின் பேரில் விசிக மாவட்டச் செயலாளர் தனபால் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.
இதனால் இந்த விவகாரத்தை உடனடியாக திருமாவளவன் கவனத்துக்கு கொண்டு சென்ற நிர்வாகிகள், நடந்ததை கூறி கொதித்துள்ளனர். இதனிடையே விசிக நிர்வாகி பெண் தாசில்தாரை தரக்குறைவாக திட்டிய விவரமும் காவல்துறை மூலம் திருமாவளவன் கவனத்துக்கு சென்றிருக்கிறது.
இதையடுத்து வட்டாட்சியருக்கு மிரட்டல் விடுத்த சம்பந்தபட்ட நிர்வாகிக்கு விசிக மேலிடம் அறிவுரை வழங்கியதாகவும் கொடிக்கம்பம் நடும் விவகாரத்தை திருமாவளவன் கவனித்துக் கொள்வார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications