பழனியில் வழிப்பறி கொள்ளையரை பிடிக்க முயன்ற எஸ்.ஐ.க்கு கத்திக்குத்து.. மருத்துவமனையில் அனுமதி
வழிப்பறி கொள்ளையரை பிடிக்க முயன்ற எஸ்ஐக்கு கத்திக்குத்து விழுந்தது.
கோவை: பழனியில் திருட்டு வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை பிடிக்க முயற்சி செய்த எஸ்.ஐ., கத்தியால் பலமாக தாக்கப்பட்டார். இதையடுத்து, அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் மே-30ம் தேதி பெண்ணிடம் மர்ம நபர்கள் 8 பவுன் தங்க நகையை பறித்து சென்றனர். இதுகுறித்து பேரூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன் தலைமையில், எஸ்ஐ ஆறுமுகநயினார் உள்ளிட்ட 3 பேர் தனிப்படையினர் வழிப்பறிக் கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் பழநியில் முகாமிட்டு இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் தனிப்படையினர் விரைந்தனர்.

அப்போது தெற்கு கிரி வீதி நகராட்சி டோல்கேட் அருகே, காரில் வேகமாக வந்தவர்களை சந்தேகத்தின் பேரில் தனிப்படையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது காரில், விக்னேஷ், யாசிக் அகமது உள்ளிட்ட 3 பேர், மூன்று பெண்கள், 12 வயது சிறுவன் ஆகியோர் இருந்தனர். விசாரித்தபோது, முன்னுக்குபின் முரணாக பதில் அளித்ததால் போலீசார், அவர்களை கைது செய்ய முயன்றனர்.
அப்போது, எஸ்ஐ ஆறுமுக நயினாருக்கு கழுத்து பகுதியில் பலத்த கத்திக்குத்து விழுந்தது. இதையடுத்து தப்பிக்க முயன்ற கொள்ளையர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். இதனையடுத்து படுகாயமடைந்த எஸ்ஐ ஆறுமுகநயினார் பழனியில் முதலுதவி சிகிச்சை முடிந்த பின்னர் , கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications