உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் மும்முரம்... விரைவில் தேர்தல் தேதி அறிவிப்பு?
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தொடங்கியிருப்பதால் தேர்தல் நடைபெறுவதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: சென்னை ஹைகோர்ட் உத்தரவின்படி, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் மே மாதம் நடைபெறவுள்ளதால், இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருவதால் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 123 நகராட்சிகள்ம, 529 நகர பஞ்சாயத்துகள், 385 பஞ்சாயத்து யூனியன்கள், 12,524 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இந்த உள்ளாட்சிகளின் பதவிக் காலம் கடந்த செப்டம்பர் மாதம் நிறைவடைந்தது.
இந்நிலையில் அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டபோது, உரிய கால அவகாசம் வழங்காமல் தேர்தலை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரபபட்டது.

ஹைகோர்ட் உத்தரவு
இந்நிலையில் இந்த வழக்கை அண்மையில் விசாரித்த சென்னை ஹைகோர்ட் நீதிபதிகள், மே 14-ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் உத்தரவிட்டது. அப்போது அதிகாரிகளின் உள்ளாட்சி தேர்தல் குறித்து பயிற்சி வழங்க வேண்டியுள்ளதால், மே 15-ஆம் தேதிக்குள் நடத்துவதாக தமிழக தேர்தல் ஆணையத்தின் வாதத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.

தேர்தலை தள்ளி வைக்க முயற்சி
மே மாதம் மாணவர்களுக்கு தேர்வுகள் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகி அடுத்தக்கட்ட படிப்புக்கு தயாராக வேண்டியதிருப்பதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சொல்லி தேர்தலை ஒத்திவைக்க முயற்சி நடப்பதாக கூறப்பட்டது.

வாக்காளர் பட்டியல்
தற்போது முதல் பணியாக, கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையத்திடம் இருந்து அதிகாரிகள் இறுதி வாக்காளர் பட்டியலைப் பெற்று இந்த பணியை தொடங்கியுள்ளனர். அடுத்தது, இறுதி வாக்காளர் பட்டியலை கொண்டு வாக்குச்சாவடிகளை அமைப்பதற்கான பணிகள், வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்க்க அவகாசம் அளிப்பது உள்ளிட்ட பணிகள் சப்தம் இல்லாமல் நடைபெற்று வருகின்றன.

அடுத்த வார இறுதியில் அறிவிக்கை?
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அடுத்த கட்ட விசாரணை திங்கள்கிழமை சென்னை ஹைகோர்ட்டில் நடைபெறவுள்ளது. அப்போது தமிழக தேர்தல் பிரிவு அதிகாரிகள், மே 14-ம் தேதிக்கு முன்பு தேர்தலை எப்போது நடத்துவது என்பது குறித்த விவரத்தை சீல் வைக்கப்பட்ட உறையில் வைத்து நீதிபதியிடம் வழங்குவர். அதன் பின்னரே தேர்தல் தேதி தெரியவரும். எனவே உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புதிய தகவல்கள் அடுத்த வாரம் தெரிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications