திமுக பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் மதுரையில் காலமானார்
உடல் நலக்குறைவால் மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக ஸ்டார் பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் காலமானார்.
மதுரை: திமுக தலைமைக் கழக பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் உடல்நலக்குறைவு காரணமாக மதுரையில் சனிக்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 78.
மதுரையைச் சேர்ந்தவர் தீப்பொறி ஆறுமுகம். 1970களில் திமுகவின் முன்னணி பேச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர். நீண்ட காலமாக திமுகவின் தலைமைக் கழக பேச்சாளராக இருந்தார். கடந்த 2001 ஆம் ஆண்டு திமுக தலைவர் தன்னை புறக்கணிப்பதாக கூறி, அதிமுகவில் இணைந்தார்.

அதிமுகவின் தலைமைக் கழக பேச்சாளராக ஒன்பது ஆண்டுகளாக பணியாற்றினார். பின்னர் 2010ல் அதிமுகவில் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்று கூறி மீண்டும் திமுகவில் இணைந்தார். தொடர்ந்து திமுக பேச்சாளராக வலம் வந்த தீப்பொறி ஆறுமுகத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனிடேயே திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து, திமுக அறக்கட்டளை சார்பாக முதற்கட்டமாக ஒரு லட்சத்திற்கான காசோலை வழங்கினார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சனிக்கிழமை இரவு 9 மணி அளவில் அவர் காலமானார். மதுரை ஹெய்ஹிந்துபுரம் ஜீவாநகரில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications