தேனி எம்.பியையும் தட்டிச் சென்றார் முதல்வர் ஓ.பி.எஸ்!
முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி லோக்சபா எம்.பி. ஆர். பார்த்திபன் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டமும் தற்போது அவரது வசமாகி விட்டது. தேனி லோக்சபா உறுப்பினர் பார்த்திபன் முதல்வரை நேரில் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
பார்த்திபனையும் சேர்த்து இதுவரை முதல்வருக்கு 11 அதிமுக எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தேனி லோக்சபா தொகுதி உறுப்பினராக இருந்து வருபவர் ஆர். பார்த்திபன். இன்று இரவு பார்த்திபன் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தை அவரது வீடு தேடி வந்து சந்தித்தார். பச்சை நிற பொன்னாடையை அணிவித்து தனது ஆதரவைத் தெரிவித்தார்.
இன்றைய தினம் முதல்வருக்கு மிகப் பெரிய நாளாக அமைந்தது. இன்று மட்டும் பார்த்திபனையும் சேர்த்து 6 எம்.பிக்கள் முதல்வருக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். சசிகலா முகாம் மிகப் பெரிய சீரழிவை சந்திக்கப் போவதையும் இது சுட்டிக் காட்டுவதாக அமைந்துள்ளது.