தனக்கு வாங்கி வந்த புரோட்டாவை உறவினர் சாப்பிட்டதால் கணவருடன் சண்டை... மனைவி தற்கொலை
தேனி: தேனி மாவட்டத்தில் கணவருடன் ‘புரோட்டா' தொடர்பாக உண்டான சண்டையில், மனமுடைந்த இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகில் உள்ள கோகிலாபுரத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி மீனா (19).
சம்பவத்தன்று சரவணன் தனது மனைவிக்காக புரோட்டா வாங்கி வீட்டில் வைத்திருந்துள்ளார். ஆனால், அதனை அப்போது வீட்டிற்கு வந்த அவரது உறவினர் சரவணன் எடுத்து சாப்பிட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைக் கண்டு ஆத்திரம் அடைந்த மீனா, இது தொடர்பாக தனது கணவரிடம் சண்டை போட்டுள்ளார். இத்தகராறால் மனமுடைந்த மீனா அறைக்குள் சென்று சேலையால் தூக்கிட்டுக் கொண்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மீனாவை மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்ட மீனா, சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மீனாவின் மரணம் தொடர்பாக உத்தமபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.