எதிர்க்கட்சிகள் இல்லாமல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு.. எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு வெற்றி
சபையில் ஓ.பி.எஸ் ஆதரவு அணியினர் மட்டுமே உள்ள நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. உறுப்பினர்கள் தலைகளை எண்ணி வாக்கெடுப்பு நடந்தது. 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவோடு எடப்பாடி பழனிச்சாமி அரசு தப்பியது.
சென்னை: சட்டசபையில் 6 பிரிவுகளாக எம்.எல்.ஏக்களை பிரித்து வைத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. எதிர்க்கட்சிகளே இல்லாமல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அரசு தப்பியது.
முதல் 1,2,3 பிரிவுகளில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அமர்ந்திருந்தனர். 4,5,6ம் பிரிவுகளில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த அதிமுகவினர், திமுக, மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.
ஒவ்வொரு வரிசையிலுள்ளவர்களையும் எழுந்து நிற்க வைத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. முன்னதாக அமளியில் ஈடுபட்டதாக திமுக உறுப்பினர்களை கூண்டோடு வெளியேற்றினார் சபாநாயகர். இதை கண்டித்து காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். சபையில் ஓ.பி.எஸ் ஆதரவு அணியினர் மட்டுமே உள்ள நிலையில், வாக்கெடுப்பு நடந்தது. உறுப்பினர்கள் தலைகளை எண்ணி வாக்கெடுப்பு நடந்தது. பழனிச்சாமி அரசுக்கு ஆதரவாக 122 எம்.எல்.ஏக்களும், எதிராக 11 எம்.எல்.ஏக்களும் வாக்களித்தனர். இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி அரசு வெற்றி பெற்றது.