தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு முட்டை வழங்கும் நிறுவனத்தில் ஐடி ரெய்டு.. அமைச்சர் விளக்கம்
சென்னை: சத்துணவு திட்டத்திற்கு முட்டை சப்ளை செய்யும் நிறுவனத்தில் நடக்கும் ஐடி ரெய்டுடன் தமிழக அரசை இணைத்து பேச வேண்டாம் என்று, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அரசு சத்துணவு திட்டத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் முட்டை விநியோகம் செய்யும் திருச்செங்கோட்டை தலைமையிடமாக கொண்ட தனியார் நிறுவனத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று முதல் தொடர்ந்து ரெய்டு நடத்தி வருகிறார்கள்.
இந்த நிறுவனம், சத்துமாவு, பருப்பு உள்ளிட்டவற்றையும் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு விநியோகித்து வருகிறது. தமிழக அரசு இந்த நிறுவனத்திற்கு முட்டை, சத்துமாவு வினியோகிக்க உரிமம் வழங்கியுள்ள நிலையில், அந்த நிறுவனங்களில் ஐடி ரெய்டு நடந்துள்ளது பரபரப்பை கிளப்பியது.
சென்னையில், இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களிடம் கூறுகையில், பல்வேறு தர பரிசோதனைகளுக்கு பிறகு, தரமான முட்டைதான் என்பதை உறுதி செய்தபிறகே பள்ளிகளுக்கு சத்துணவு முட்டைகள் வந்தடைகின்றன. இதில் முறைகேடு நடைபெற வாய்ப்பு இல்லை.
ஐடி ரெய்டு என்பது, சம்மந்தப்பட்ட நிறுவனம், வருமான வரி செலுத்தாதது தொடர்பானது. அதற்காக, தமிழக அரசை தொடர்புபடுத்துவது சரியல்ல என்றார்.