திமுகவில் ஜனநாயகம் செத்துவிட்டது... திமுக அழிவுக்கு வீரமணியே காரணம்: மு.க. அழகிரி
சென்னை: திமுகவில் உட்கட்சி ஜனநாயக செத்துபோய்விட்டது.. திமுக அழிவுக்கு காரணமே திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணிதான் என்று அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தென் மண்டல அமைப்பு செயலர் மு.க. அழகிரி காட்டமாக விமர்சித்துள்ளார்.
திமுகவில் கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக அக்கட்சித் தலைவர் கருணாநிதியின் மகனும் தென் மண்டல அமைப்பு செயலருமான மு.க. அழகிரி நேற்று தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தமது நீக்கம் குறித்து ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டி விவரம்:

ஜனநாயகம் செத்துவிட்டது..
கேள்வி: உங்கள் மீது தி.மு.க. தலைமை எடுத்திருக்கும் இந்த நடவடிக்கை பற்றி உங்கள் கருத்து என்ன?.
பதில்: என்னை நீக்கியதை பற்றி என்னிடமே கேட்கிறீர்களா?. நியாயம் என்றும் வெல்லும். அவ்வளவுதான். ஜனநாயகம் இல்லை. அந்த கட்சியில் ஜனநாயகம் செத்துப்போய்விட்டது.

குழப்பம் ஏற்படுத்தினேனா?
கேள்வி: நீங்கள் குழப்பம் விளைவித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டிருக்கிறதே?.
பதில்: நான் ஒன்றும் குழப்பத்தை ஏற்படுத்தவில்லை. நான் 3 நாள் ஹாங்காங் சென்றுவிட்டு நேற்று இரவு தான் வந்தேன். ஹாங்காங்கில் போய் நான் கட்சிக்கு எதிராக தவறாக ஏதாவது செய்துவிட்டேனா? ஒன்றுமில்லை. 5 பேர் மீது நடவடிக்கை எடுத்தார்கள். அதற்கு காரணம் கேட்டேன். அதற்காகத்தான் இந்த நடவடிக்கை.
அதாவது கட்சிக்காரர்களுக்காக எதுவும் செய்யக்கூடாது. கட்சிக்காக உழைத்த கட்சிக்காரர்களுக்காக நான் கேட்டேன். இன்றைக்கு புதிதாக வந்த கட்சிக்காரர்கள் இவர்களுக்கு தேவைப்படுகிறார்கள். நேற்று வரை அ.தி.மு.க.வில் இருந்தவர்கள் இவர்களுக்கு தேவைப்படுகிறார்கள். அவ்வளவு தான்.

தே.மு.தி.கவால் லாபம் இல்லை
கேள்வி: தி.மு.க-தே.மு.தி.க கூட்டணி ஏற்படுவது குறித்து உங்கள் கருத்து என்ன?.
பதில்: நிச்சயமாக தே.மு.தி.க.வினால் தி.மு.க.விற்கு எந்த லாபமும் கிடையாது.

வீரமணிதான் திமுக அழிவுக்கு காரணம்
கேள்வி: திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உங்களைப் பற்றி விமர்சித்திருக்கிறாரே?.
பதில்: எப்போதெல்லாம் ஆட்சி மாறுகிறதோ, அப்போதெல்லாம் அவர் கருத்து தெரிவிப்பார். ஆட்சி மாறும் போதெல்லாம் கருத்து சொல்லும் கறுப்பு மனிதர் அவர். கருணாநிதி கைது செய்யப்பட்ட போது நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று சொன்னார். பின்னர் அ.தி.மு.க. ஆட்சியின்போது சமூக நீதிகாத்த வீராங்கனை என்று சொன்னார். தற்போது, தி.மு.க.வின் அழிவிற்கு அவரும் ஒரு காரணம் ஆகி வருகிறார்.

திமுக பற்றி அக்கறை இல்லை..
கேள்வி: வருகிற தேர்தலில் தி.மு.க. எப்படி கூட்டணி அமைய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?.
பதில்: அதெல்லாம் எனக்கு தெரியாது. என்னைத்தான் கட்சியில் இருந்து நீக்கிவிட்டார்களே. இனிமேல் தி.மு.க.வை பற்றி எனக்கு என்ன?. எனக்கு அக்கறை இல்லை.

திமுக சொத்தை அபகரிக்க முயற்சி
கேள்வி: எதற்காக உங்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நினைக்கிறீர்கள்?.
பதில்: சந்தர்ப்பவாதமாக அவர்கள் செய்கிறார்கள். அவ்வளவுதான். சிலருடைய வலுக்கட்டாயத்தினால் இதெல்லாம் நடக்கிறது. தி.மு.க.வின் சொத்தை அபகரிக்க சிலர் முயற்சிக்கிறார்கள். அதனால் தான் இந்த நடவடிக்கை. அவ்வளவு தான்.

கருணாநிதியை பிளாக்மெயில் செய்கிறார்கள்
என் தந்தையை (கருணாநிதியை) யாரோ சிலர் பிளாக்மெயில் செய்து மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் தெரியும். ஸ்டாலின் ஆதரவாளர்கள் மீதான வழக்குக்கும் எனக்கும் எந்த தொடர்புமே இல்லை. ஒருவர் ஜாதியை சொல்லி திட்டியது உண்மை என்றால், அவர் புகார் செய்ய வழி இருக்கும்போது, புகார் தான் செய்வார். உங்களை திட்டினா நீங்க சும்மா இருப்பீங்களா?

கூடுதல் பலம்
என்னை கட்சியில் இருந்து நீக்கிய பின், என் ஆதரவாளர்கள் இன்னும் அதிக பலத்துடன் உள்ளார்கள்.

ஜனவரி 30-ல் நிலைப்பாடு அறிவிப்பு
எனது அடுத்த கட்டநிலைப்பாடு குறித்து, ஜனவரி 30ந் தேதியன்று மதுரையில் நடக்கும் பிறந்த நாள் விழாவில் தெரிவிப்பேன். மதுரைக்கு ஜனவரி 26ந் தேதி வருகிறேன். அங்கு என் தொண்டர்களுடன் ஆலோசனை நடத்துவேன். அது வரை அமைதியாக இருக்க வலியுறுத்தியுள்ளேன்.
இவ்வாறு அழகிரி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications