Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

EXCLUSIVE: தமிழகத்தில் மக்கள் கிளர்ந்து எழுகிறார்கள்.. ஆட்சி மாற்றம் நிச்சயம் நடக்கும்.. டி.ராஜா

தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் நிகழும் என டி.ராஜா தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் நடக்கும்..டி.ராஜா- வீடியோ

    சென்னை: அதிமுக அரசுக்கு எதிராக தமிழக மக்கள் கிளர்ந்து எழுந்து வருகிறார்கள் என்றும் எனவே ஆட்சி மாற்றம் என்பது தவிர்க்கவே முடியாத ஒன்று என்று நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளருமான டி.ராஜா தெரிவித்துள்ளார்.

    நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ரபேல் விமான ஊழல் மற்றும் தமிழகத்தின் அரசியல் நிலவரம், தேர்தலில் யாருடன் கூட்டணி என்று பல்வேறு கேள்விகள் "ஒன் இந்தியா தமிழ்" சார்பாக டி.ராஜாவிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர் அளித்த பதில்கள்தான் இவை

    There will definitely be regime change in Tamil Nadu: D.Raja

    கேள்வி: ரபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக பாஜகவின் ஊழல் அம்பலமானதாக எதிர்க்கட்சிகள் கூறிவருகிறார்களே? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

    ரபேல் போர் விமான ஊழல் மோடி ஆட்சியில் நடைபெற்றிருக்கிற மிகப்பெரிய ஊழல். பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், பாராளுமன்றத்திற்கு வெளியேயும் மோடி அரசில் சொல்லப்பட்டவை அனைத்தும் பொய்கள் என்றே நிரூபணமாகி வருகிறது. பிரெஞ்சு முன்னாள் அதிபர் அறிக்கையின் மூலம், இந்தியாவின் பொதுத்துறை நிறுவனத்தை நிராகரித்துவிட்டு ஒரு தொழிலதிபர் குடும்பத்தை சார்ந்த நிறுவனத்திற்கு அந்த விமான பங்குதாரராக மாற்றியது இந்திய அரசாங்கம்தான் என்பது அம்பலமாகி உள்ளது. இதுகுறித்து கேள்விகள் எழுகிறபோது, பாதுகாப்பு அமைச்சரோ, பிரதமரோ உரிய பதிலை சொல்வதாக இல்லை. அதற்கு மாறாக கேள்வி கேட்பவர்கள் மீது அவதூறுகளை தூற்றுவது, பொய்களை சொல்வது என்பதுதான் வாடிக்கையாக உள்ளது. எனவே இந்த அரசு எவ்வளவு பொய் பேசுகிறது, எவ்வளவு தவறான தகவல்களை தந்து வருகிறது என்பது நிரூபணமாகி உள்ளது. பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறுகிறபோது, இந்த பிரச்சனை கண்டிப்பாக எழுப்பப்படும். ஏற்கனவே நடைபெற்ற கூட்டத்தில் கூட்டு பாராளுமன்ற குழு இதனை விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. எதிர்க்கட்சிகளின் இந்த கோரிக்கைக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் பிரெஞ்சு முன்னாள் அதிபரே அறிக்கை வெளியிட்டு விட்டார்.

    கேள்வி: புதிய திமுக தலைவர் ஸ்டாலின் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? வரும் தேர்தலில் திமுகவுடன் உங்களுக்கு கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?

    இன்றைக்கு தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்ற கழகம், 2 கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, 2 முஸ்லீம் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு செயல்பட்டு வருகின்றன. நம் மாநில உரிமைகளுக்காகவும், மாநில மக்களின் நலன்களுக்காகவும் பல்வேறு இயக்கங்கள் கட்சிகள் மூலம் நடைபெற்று இருக்கின்றன. குறிப்பாக காவிரி பிரச்சனையாகட்டும், நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் ஆகட்டும் இந்த கட்சிகள் அவற்றிற்கு எதிராக ஒன்றுகூடியே செயல்பட்டு வருகின்றன. தற்போது ஆளும் தமிழக அரசினை மத்தியில் ஆளும் பாஜகவின் எடுபிடி என்று பலரும் சொல்லி வருகின்றனர். பாஜக ஆட்டுவிக்கிற படியெல்லாம் ஆடுகிற ஒரு அரசாக மாநில அரசு இன்றைக்கு இருந்து வருகிறது. மாநில மக்களின் உரிமைகளை கைவிட்ட ஒரு அரசாகவோ, மாநிலத்தின் உரிமைகளுக்கு போராடுவதற்கு துணிவற்ற ஒரு அரசாகவும் இது மாறி இருக்கிறது. இந்த அரசின் மீது குட்கா உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இந்த சூழலில் தமிழகத்தின் நலன் காப்பாற்றப்படுவதற்கும், மாநில மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கும் தமிழ்நாட்டில் ஒரு மாற்று அரசு தேவைப்படுகிறது. வரக்கூடிய தேர்தலில் அதற்கான மாற்றம் ஏற்பட வேண்டும்.

    கேள்வி: தமிழக பாஜக நிலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    தமிழக மக்கள் பாஜக மீது அதிக கோபத்தில் உள்ளனர். பாஜகவின் மதவெறி அரசியல் பாஜகயை சேர்ந்த சில தலைவர்களின் செயல்பாடுகள் தமிழநாட்டு மக்களுக்கு பெரும் ஆத்திரத்தையும் கோபத்தையும் உருவாக்கி இருக்கின்றன. எனவே மத்திய பாஜகவை அகற்றப்பட வேண்டும் என்ற இந்தியா முழுவதிலும் மக்களுக்கு கோபம் எழுந்திருப்பதை போல, தமிழ்நாட்டில் பாஜக எந்தவகையிலும் காலூன்றிவிடக்கூடாது என்று மக்களிடம் ஒரு கோபம் இருப்பதாகத்தான் நான் கருதுகிறேன்.

    கேள்வி: மறைந்த தலைவர் கருணாநிதியின் இழப்பை எப்படி பார்க்கிறீர்கள்?

    தமிழக வரலாற்றை கலைஞரின் பெயரை சொல்லாமல் எழுதிவிட முடியாது. சமகால வரலாறு என்று எடுத்து கொண்டால் அது கலைஞரின் வரலாற்றோடு பின்னி பிணைந்தது. கலைஞர் ஒரு பல பரிமாணங்களை கொண்ட ஆளுமை கொண்டவராக மக்களிடம் இருந்திருக்கிறார். வெறும் அரசியல்வாதியாக மட்டும் இல்லாமல், சமூக போராளியாக, மொழி வளர்ச்சி, மாநில உரிமைகள், சுயாட்சி, இலக்கியம், என்று பல்வேறு துறைகளில் தனது பங்கினை அவர் செலுத்தி இருக்கிறார். கலைஞர் ஒரு நீண்ட கால அரசியல் தலைவர். பெரியாரின் பாசறையிலும், அண்ணாவின் நெருக்கத்திலும் வளர்ந்தவர் என்றாலும், திராவிடர் இயக்கத்தை வளர்த்தவர்.

    கேள்வி: உங்கள் மீது அதிக நம்பிக்கையும் மரியாதையும் கொண்டவர் ஜெயலலிதா. அவரை பற்றியும், இன்றைக்கு இல்லாத நிலையில், அதிமுகவின் நிலையையும் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

    ஜெயலலிதாவும் முதலமைச்சராக இருந்தபோது பல்வேறு நலத்திட்டங்களை தமிழ்நாட்டிற்காக செயல்படுத்தினார். குறிப்பாக பெண்கள் நலனை மையப்படுத்தி பல நல்ல ஆக்கப்பூர்வமாக திட்டங்களை கொண்டு வந்ததை யாரும் மறுத்துவிட முடியாது. அதேபோல ஜெயலலிதா எம்ஜிஆருக்கு பின்னர் அதிமுக என்ற கட்சியை கட்டிக் காத்தவர். எம்ஜிஆரின் அரசியலை பின்பற்றி வந்தாலும் தனக்கென்று ஒரு இடத்தை பெற வேண்டும் என்று அவர் பல களங்களில் செயல்பட்டிருக்கிறார். மற்ற கட்சி தலைவர்களுடன் பழகுவதில் கலைஞர், ஜெயலலிதா இருவருக்குமே ஒரு தனித்துவம் இருந்திருக்கிறது. இருவருக்குமே தமிழ்நாட்டு அரசியலில் பெரும் பங்கு இருக்கிறது. ஆனால் இன்றைக்கு வளர்த்த கட்சி இன்றைக்கு பல சோதனைகளுக்கும் கேள்விகளுக்கும் உள்ளாகி இருக்கிறது. அவரை சார்ந்தவர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டு உள்ளதுடன், நீதிமன்றத்தினாலே தண்டிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது அதிமுகவுக்கு மிகபெரிய சரிவினை ஏற்படுத்தி இருக்கிறது.

    இவ்வாறு டி.ராஜா பதிலளித்தார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+