காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டார் தியாகு

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்கக் கூடாது, இலங்கையை காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 1-ந் தேதி தியாகு சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.
வெற்றி அல்லது வீரச்சாவு என்ற முழக்கத்துடன் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தை பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் இயக்கங்களின் தலைவர்கள் ஆதரித்தனர். ஆனால் கடந்த வாரம் தியாகுவின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையிலும் அவர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடரவே அங்கிருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னரும் அவர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்தார்.
இதனிடையே தியாகுவின் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு திமுக தலைவர் கருணாநிதிக்கு பிரதமர் மன்மோகன்சிங் நேற்று கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் இன்று தியாகுவின் உடல்நிலை மோசமடையவே அவரை போலீசார் வலுக்கட்டாயமாக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் தாம் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுவதாகவும் ஆனால் ஆதரவு தலைவர்கள் முன்னிலையில்தான் போராட்டத்தை நிறைவு செய்வேன் என்றும் தியாகு வலியுறுத்தினார். போலீசாரோ அனுமதி மறுக்கவில்லை.
இந்நிலையில் மருத்துவமனையிலேயே தாய்த் தமிழ் பள்ளிக் குழந்தைகள் கொடுத்த பழரசத்தை அருந்தி தமது உண்ணாவிரதப் போராட்டத்தை தியாகு நிறைவு செய்தார்.












Click it and Unblock the Notifications