பொறியில் சிக்கிய எலி போல.... ஏடிஎம் மைய கதவில் மாட்டிய கொள்ளையன் கைது
கோவை: கோவையில் ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்து, ஏடிஎம் மையத்தினுள்ளே சிக்கிக் கொண்ட கொள்ளையனை போலீஸார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம்-சங்கனுார் சாலையில், ஒரு தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் ஒன்றில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. நேற்று காலை பணம் எடுப்பதற்காக சிலர் அந்த ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது, எலிப்பொறியில் சிக்கிய எலி போன்று ஏடிஎம் மையத்தினுள் ஒருவர் மாட்டிக்கொண்டிருப்பதை அவர்கள் பார்த்துள்ளனர்.
இதையடுத்து அவர்கள் அளித்த தகவலையடுத்து, வங்கி அதிகாரிகள் அங்கு வந்துள்ளனர். அந்த நபர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்திருப்பது தெரியவந்ததால், போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் பாஸ்வேர்டு மூலமாக தானியங்கி கதவைத் திறந்தனர். விசாரணையில், அந்த நபர் வடகோவை பகுதியிலுள்ள மணியகாரம்பாளையம், அஞ்சுகம் நகரை சேர்ந்த கந்தசாமி(43) என்பது தெரியவந்தது. மேலும், நள்ளிரவில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஏடிஎம் மையத்தின் தானியங்கி கதவு மூடிக் கொண்டதால் அவர் வசமாக போலீஸாரிடம் சிக்கிக் கொண்டார்.