திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாற்றம்.. ராஜகோபுரத்தில் 40 அடி உயரத்தில் அதென்ன? பக்தர்கள் பரவசம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் ராஜகோபுரம் பற்றின செய்திதான், பக்தர்களிடையே மிகப்பெரிய அளவு பேசப்பட்டு வருகிறது.. ராஜகோபுரத்தில் அதென்ன பிரம்மாண்டம்? அதென்ன வித்தியாசமான வேல்? என்ற ஆர்வம் பக்தர்களிடையே எழுந்துள்ளது.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலானது, கடற்கரைக்கு அருகிலேயே அமைந்துள்ளது.. உலக அளவில் புகழ்பெற்ற இந்த கோயிலில் விசேஷ, விரத, விடுமுறை நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும், மற்ற நாட்களில் நூற்றுக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனம் பெற்று செல்வார்கள்.

15 வருடங்களுக்கு பிறகு, திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், கும்பாபிஷேகம் நடத்த முடிவாகி உள்ளது. வருகிற ஜூலை மாதம் 7-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது..
ராஜகோபுரம் பணிகள்
கடந்த 2022-ம் ஆண்டிலிருந்தே இதற்கான பணிகளும் நடந்துகொண்டிருக்கின்றன.. HCL நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி, அறநிலையத்துறை சார்பில் ரூ.100 கோடி என மொத்தம் ரூ.300 கோடி மதிப்பில் பெருந்திட்ட வளாக பணிகளும், கும்பாபிஷேக திருப்பணிகளும் நடந்து வருகிறது. குறிப்பாக, 137 அடி உயரமும், 9 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக ராஜகோபுரத்தில் 9வது நிலையில் கட்டபொம்மன் காலத்தில் உள்ள ராஜகோபுர மணி பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. காரணம், வருகிற கும்பாபிஷேக தினத்தன்று இந்த மணிதான் ஒலிக்க போகிறதாம்.. இந்த மணிக்கு, வர்ணம் பூசும் பணியும் நடந்து கொண்டிருக்கிறது.
வேல் பொருத்தும் பணி
இதனிடையே, ராஜகோபுரத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்ட 40 அடி உயரம் கொண்ட பிரமாண்ட வேல் பொருத்தப்பட்டுள்ளது.. ராஜகோபுரத்தில் 6 வது தளத்தில் இருந்து 9 வது தளம் வரை இந்த வேல் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வேல் பொருத்தும் பணிக்கு 2 நாட்கள் ஆயிற்றாம்.. இந்த புதிய வேல் சென்னையில் ஒரு மாத காலமாக உருவாக்கப்பட்டு, அதற்கு பிறகே திருச்செந்தூர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கலர் கலர் மின் விளக்குகள்
இந்த வேலில், நவீன மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், வேலின் மேல் பகுதியில் திருநீறு பூசியது போல் மின் விளக்குகளால் மூன்று கோடுகளும், கீழ்ப்பகுதியில் "ஓம்" என்ற எழுத்தும் அமைக்கப்பட்டுள்ளன.. இங்கு ஏற்கனவே ராஜகோபுரத்திலும் வேல் பொருத்தப்பட்டுள்ளது.. இந்த 5 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து பார்த்தாலும் பக்தர்களுக்கு பளிச்சென தெரியும். அதுபோலவே இந்த வேலும் பக்தர்கள் பார்த்தவுடனேயே பரவசமாகும் அளவுக்கு ஜொலிக்க போகிறதாம்.












Click it and Unblock the Notifications