ஜெ. வெற்றி குறித்து எஸ்.ஆர். பி சொன்னது பொதுவான கருத்துதான்.. ஜி.கே.வாசன் விளக்கம்
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவைப் போட்டியின்றி தேர்வு செய்ய வேண்டும் என எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் கூறியது பொதுவான கருத்துத்தான் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 9ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி ‘கூட்டணி ஆட்சி'யை வலியுறுத்தி கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்துள்ளது. இதில் பங்கேற்க திமுக, அதிமுக, பாமக தவிர மற்ற கட்சித் தலைவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்து வருகிறார்.
அந்தவகையில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனைச் சந்தித்தார் திருமாவளவன். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார் ஜி.கே.வாசன். அப்போது அவர் கூறியதாவது:-
மாநிலத்திலும், மத்தியிலும் கூட்டணி ஆட்சி வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். முன்பு ஜி.கே. மூப்பனார் ஒரு அணியை அமைத்த போதே இந்த கருத்து வலியுறுத்தப்பட்டது.
இப்போது திருமாவளவனும் அதே கருத்தை வலியுறுத்தி கருத்தரங்கம் ஏற்பாடு செய்துள்ளார். அவரது கருத்து பற்றி கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பரிசீலித்து முடிவு எடுப்போம்' என்றார்.
அதனைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவை போட்டியின்றி தேர்வு செய்ய வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் கூறியுள்ளது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், ‘பாலசுப்பிரமணியன் பொதுவான கருத்தை கூறி உள்ளார்' எனப் பதிலளித்தார். மேலும், த.மா.காவின் நிலைப்பாட்டை இன்னும் 2 நாளில் அறிவிப்போம்' என்றார்.
டிராபிக் ராமசாமி சந்திப்பு:
திருமாவளவனைத் தொடர்ந்து டிராபிக் ராமசாமி ஜி.கே.வாசனை சந்தித்து பேசினார். சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என ஜி.கே.வாசனின் டிராபிக் ராமசாமி கேட்டுக் கொண்டார்.
இந்த சந்திப்புக்கு பிறகு டிராபிக் ராமசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘வருகிற சட்டசபைத் தேர்தலில் திராவிட கட்சிகளுக்கு மிகப் பெரிய சறுக்கல் ஏற்படும்' என்றார்.