ஆட்டுக் குட்டி (ம.ந.கூ) போதும்.. கிடா (திமுக) வேண்டாம்.. "சிம்பாலிக்"காக சொல்லும் "சிறுத்தை"
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆட்டுக் குட்டி ஒன்றை அரவணைத்துக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
திமுக கூட்டணியில் தொடர்ந்து நீடித்து வந்தது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. வரப்போகும் சட்டசபை தேர்தலிலும் அக்கட்சி திமுக அணியிலேயே நீடிக்குமா? என கேள்வி எழுந்த நிலையில் திடீரென 'கூட்டாட்சி' 'அதிகாரத்தில் பங்கு' என்கிற முழக்கங்களை முன்வைத்தது.
அதைத் தொடர்ந்து வைகோ தலைமையிலான மக்கள் நல கூட்டியக்கத்தில் ஒரு அங்கமானது விடுதலைச் சிறுத்தைகள். பின்னர் மக்கள் நலக் கூட்டியக்கம் தேர்தல் கூட்டணியான போது சிறுத்தைகள் அதில் இடம்பெறுமா? இடம்பெறாதா? என கேள்வி வந்தது. அதற்கும் முற்றுப்புள்ளி வைத்து மக்கள் நலக் கூட்டணியின் ஒரு அங்கமாகி இருக்கிறது.
இந்த கூட்டணி பிரசாரத்துக்கு களமிறங்கிய போது தலித் ஒருவரை முதல்வராக்க வேண்டும் என்று சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார் கொளுத்திப் போட அது பெரும் விவாதத்தை கிளப்பியது. இருந்தாலும் அசராத மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் அதிரடியாக பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆட்டுக்குடியுடன்...
அண்மையில் கூட மக்கள் நலக் கூட்டணி தலைவர்களான வைகோ, திருமா, ஜி. ராமகிருஷ்ணன், முத்தரசன் 'செல்பி' எடுத்து போட அது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், ஆட்டுக் குட்டி ஒன்றை அரவணைத்தபடி இருக்கும் படம் இன்று சமூக வலைதளங்களில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
நல்ல மேய்ப்பர்...
இப்படங்களைப் பகிர்ந்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அகரன், "மக்களை காக்கும் நல்ல மேய்ப்பர் -எழுச்சித்தமிழர்" என தலைப்பிட்டுள்ளார்.
தாய் சிறுத்தை
Villalan Resli என்பவர், இந்த ஆட்டுக்குட்டியை அரவணைக்கும். ஓநாய் நரி கூட்டத்தை விரட்டியடிக்கும். ஆம் இது தாய்சிறுத்தை என முழங்கியுள்ளார்.
இப்படியும் இருக்குமோ
இதில் முதல் படத்தைப் பார்க்கும்போது, யார் என்ன சொன்னாலும் மக்கள் நலக் கூட்டணியைவிட்டு நான் போகமாட்டேன் என இறுக அரவணைத்துக் கொண்டிருப்பது போல் தோன்றுகிறது.
சிறுத்தை காப்பாற்றும்..
இந்த படத்தைப் பார்க்கும்போது, இந்த ஆட்டுக்குட்டி போலத்தான் திராவிட கட்சிகளிடம் தமிழகம் சிக்கியிருக்கிறது.. சிறுத்தையாக நின்று தமிழகத்தைக் காப்பாற்றுவோம் என சிம்பாலிக்காக சொல்கிறாரோ திருமா...
ரொம்ப படுத்திட்டாங்களோ..
இதைப் பார்க்கும்போது, நான் மக்கள் நலக் கூட்டணியைவிட்டு போறேன்னு சொல்லலையே? போகமாட்டேன் கவலைப்படாதீங்க என்று அதன் தலைவர்களிடம் சொல்லுகிறாரோ? திருமா...