முரசொலி பவள விழாவில் திருமாவளவனின் ஆதங்கத்தை தீர்த்து வைத்த ஸ்டாலின்
சென்னை: கருணாநிதியின் வைர விழா மேடையில் அமர வைத்திருக்கலாமே என்கிற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் ஆதங்கத்தை முரசொலி பவள விழா மேடையில் நிறைவேற்றி வைத்திருக்கிறார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின்.
சென்னை கொட்டிவாக்கத்தில் நடைபெற்று வரும் முரசொலி பவள விழா கொண்டாட்டத்தில், ம.தி.மு.க, வி.சி.க, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன. 11 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க மேடையில் ஏறுகிறார் வைகோ.
பா.ஜ.கவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் கொண்டு வரும் முயற்சிகள் வேகம் எடுத்து வருவதன் ஒரு கட்டம்தான் இந்த விழா என்கின்றனர் திமுக நிர்வாகிகள். சென்னை கலைவாணர் அரங்கத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி நடந்த முரசொலி பவளவிழா நிகழ்ச்சியில், வாழ்த்தரங்கம், படக்காட்சி என பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்தார் ஸ்டாலின்.

நந்தனம் விழா
மறுநாள் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ திடலில் அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் வகையில் பிரமாண்ட கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், மழை காரணமாக முரசொலி பவள விழா மலர் மட்டுமே வெளியிடப்பட்டது. முழுமையான நிகழ்ச்சியாக அமையவில்லை.

கொட்டிவாக்கத்தில்..
பவள விழா கூட்டம் வேறு ஒரு மேடையில் பிரமாண்டமாக நடக்கும் என அறிவித்தார் ஸ்டாலின். அந்த நிகழ்ச்சியைத்தான் இன்று கொட்டிவாக்கத்தில் நடத்தி வருகிறார் ஸ்டாலின்.

வைரவிழா
முன்னர் கருணாநிதியின் சட்டசபை வைரவிழாவில் அகில இந்திய தலைவர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் உள்ள சில கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

திருமா ஆதங்கத்தை நீக்கிய ஸ்டாலின்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவனுக்கு மேடையின்கீழ்தான் இருக்கை போடப்பட்டிருந்தது. மதவாத சக்திகளுக்கு எதிராக திரண்ட அந்தக் கூட்டத்தின் மேடையில் எங்களுக்கும் இடம் கொடுத்திருக்கலாம் என ஆதங்கப்பட்டார் திருமா. இந்த ஆதங்கத்தைப் போக்கும்விதமாக இன்று திருமாவளவன் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் ஓரணியில் முரசொலி பவள விழா மேடையில் திரண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications