பாஜகவோடு திமுக சேராது என்பது எடப்பாடிக்கு நல்லாவே தெரியும்.. ஆனாலும் ஏன் பதட்டம்? திருமா பாய்ச்சல்!
திருச்சி: பாஜக திமுகவோடு நெருங்கி விடக்கூடாது, நல்ல இணக்கத்தை உருவாக்கி விடக்கூடாது என்கிற பதட்டம் அதிமுகவிடம் வெளிப்படுகிறது. பாஜகவோடு திமுக சேராது என்பது எடப்பாடி பழனிசாமிக்கும் தெரியும், ஆனால் திமுக மீது ஒரு சந்தேகத்தை எழுப்ப வேண்டும் என்பதற்காக இந்த விமர்சனத்தை முன்வைக்கிறார் என விசிக தலைவர் திருமாவளவம் கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்திருந்தார். ED ரெய்டுக்கு பயந்து ஸ்டாலின் டெல்லிக்கு சென்றதாக அவர் விமர்சித்திருந்தார். இந்நிலையில், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அளித்துள்ளார்.

பாஜக - திமுக
திருமாவளவன் பேசுகையில், "நிதி ஆயோக் கூட்டங்களில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்காமல் எதிர்ப்பு தெரிவித்தது ஓர் அடையாளப் போராட்டம். அதுவே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றில்லை. தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியைக் கேட்டு பெறவும், நிலுவையில் இருக்கக்கூடிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டியதும் முதலமைச்சருக்கு இருக்கக்கூடிய பொறுப்பு, கடமை.
பாஜக அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மத்திய அரசு ஆளுநர் மூலமாக நெருக்கடி தருவது என்பதைத் தாண்டி, அந்த மாநிலங்களுக்கு முறையாக வழங்க வேண்டிய நிதியையும் தருவதில்லை. இது ஒரு தேக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திட்டமிட்டே இதைச் செய்கிறார்கள். தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தத் தவறுவதால் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியைத் தர மாட்டோம் என அடம் பிடிக்கிறார்கள். இது, ஒரு எதேச்சதிகாரப் போக்கு.
உள்நோக்கத்துடன் விமர்சனம்
இவ்வாறு தடுத்து வைத்திருக்கும் நிதியைத் தமிழக அரசுக்கு ஒதுக்க வேண்டும் என்பதை நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். இது, தமிழக மக்கள் நலனுக்கு உகந்த அணுகுமுறை. இதை விமர்சிப்பது முற்றிலும் அரசியல் உள்நோக்கமுடையது. அரசியல் உள்நோக்கத்தோடு விமர்சிக்கும் போது எதையும் காரணமாக சொல்லலாம். பாஜக, திமுக-வோடு நெருங்கி விடக்கூடாது... நல்ல இணக்கத்தை உருவாக்கி விடக்கூடாது என்கிற பதற்றம் அ.தி.மு.கவிடம் வெளிப்படுகிறது.
திமுக மதச்சார்பற்ற கூட்டணியைத் தலைமை தாங்கி நடத்தும் போது பாஜக உடன் கூட்டணி அமைக்கும் வரலாற்றுப் பிழையை செய்யாது என்பது தமிழக மக்கள் உணர்ந்த உண்மை. அது, எடப்பாடி பழனிசாமிக்கும் தெரியும். ஆனால், திமுக மீது ஒரு சந்தேகத்தை எழுப்ப வேண்டும் என்பதற்காக இந்த விமர்சனத்தை முன்வைக்கிறார்.
கீழடி அகழாய்வு அறிக்கை
கீழடி ஆய்வறிக்கை என்பது கற்பனையான ஒன்றல்ல. இட்டுக் கட்டி எழுதப்பட்ட ஒன்றல்ல... வரலாற்று தரவுகளுக்கு முரணானவை அல்ல. அதில் என்ன ஐயம் இருக்கிறது? அதில் முரணான தகவல் என்ன இருக்கிறது என்பதை அவர்கள் வெளிப்படையாகச் சொல்லவேண்டும். அவ்வாறு இன்றி அதனைத் திருப்பி அனுப்பி திருத்தம் செய்து அனுப்புங்கள் என்று சொல்வது எந்த அளவிற்கு தமிழர் தொன்மை குறித்த புரிதலில் அவர்கள் பின்தங்கி இருக்கிறார்கள் அல்லது காழ்புணர்வைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ளமுடிகிறது.
தற்காலிகமாக ஒரு தேக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால், வரலாறு என்றைக்கும் வரலாறுதான். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் புதையுண்டு போன தமிழர் தொன்மையும், தமிழர் நாகரிகமும் இப்போது வெளிச்சத்திற்கு வருகிறது. ஆகவே, புதையுண்டது புதையுண்டதாகவே இருந்துவிடாது. அது, மீண்டும் வெளிச்சத்திற்கு வரும் என்பதற்கான சான்றுதான் கீழடி. தமிழர்கள் சாதியற்றவர்கள், மதமற்றவர்கள் என்பதை உலக மாந்தர்களுக்கு வழிகாட்டும் வகையில் தனித் திறன் பெற்றவர்கள் என்பதற்கான பல்வேறு தரவுகள் கிடைத்து வருகிறது. அதற்கு, கீழடி முக்கியத்துவம் வாய்ந்தது.
இதனை, வட இந்திய புராணத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களால், போலியான கதையாடல் மீது நம்பிக்கை கொண்டவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கீழடி, அறிவியல் பூர்வமான ஆய்வறிக்கை. இருந்தாலும் வட இந்தியர்கள் வேண்டுமென்றே தங்களது காழ்ப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில் இத்தகைய போக்கை கடைப்பிடிக்கிறார்கள். மீண்டும் மீண்டும் யார் என்பதை அவர்கள் அடையாளப்படுத்துகிறார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications