16 நாட்கள் விவசாயிகள் டெல்லியில் போராட்டம்… நேரில் சந்தித்து திருமாவளவன் ஆதரவு
டெல்லி ஜந்தர் மந்தரில் 16 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை திருமாவளவன் இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
சென்னை: பயிர்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 16 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிகள், அமைச்சர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்
இந்நிலையில், இன்று விவசாயிகளை நேரில் சந்திக்க, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இன்று விமானம் மூலம் டெல்லி சென்றார். அப்போது, சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
16 நாட்களாக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் வருகிறார்கள். அவர்களை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருவதுதான் காரணம். நெடுவாசல், காரைக்கால் போன்ற பகுதிகளில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட பிறகும் கூட ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டுள்ளது. பாஜகவினர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை என்று திருமாவளவன் கூறினார்.